அரியலூரில் மாயமான பெண் மகராஷ்ட்ராவில் எரித்துக் கொலை.... கொலையாளியின் பகீர் வாக்குமூலம்
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மாயமான பெண் ஒருவர் மகராஷ்ட்ர மாநிலத்தில் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள மேலணிகுழி ஏரிமேட்டு தெருவை சேர்ந்தவர்கள் ரவி (45), அம்பிகா (35) தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அம்பிகாவுக்கும், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தால் பகுதியில் உள்ள அவரது உறவினர், லாரி டிரைவர் கலியபெருமாளுக்கும் (35) இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
மனைவியை காணவில்லை
கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அம்பிகா அதன் பின்னர் வீடு திரும்பவில்லையாம். பல்வேறு இடங்களிலும் தேடிபார்த்த நிலையில் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இதையடுத்து ரவி தனது மனையியை காணவில்லை என்று மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அம்பிகா கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
செல்போனால் சிக்கிய லாரி டிரைவர்
போலீஸார் அம்பிகாவின் செல்போன் எண்ணை கண்காணித்துள்ளனர். அதில், அம்பிகா வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் கலியபெருமாளுடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அம்பிகா மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரின் செல்போனையும் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அம்பிகாவின் செல்போனில், கலியபெருமாள் தனது சிம்கார்டை பொறுத்தி பேசியது தெரியவந்தது. அந்த எண்ணை டவர் மூலம் கண்காணித்த போலீஸார், அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டிளில் இருந்த கலியபெருமாளை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அம்பிகாவை வடமாநிலத்திற்கு கடத்திச் சென்று கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
எதற்கு கொலை செய்தார் ?
இதுகுறித்து கலியபெருமாள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஏப்ரல் மாதம் வீட்டிலிருந்து வெளியேறிய அம்பிகா, என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். இதனிடையே எனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது. ஆனால் அதற்கு அம்பிகா எதிர்ப்பு தெரிவித்தார். எங்களது கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்தால், என்றுடைய திருமணம் நின்றுவிடும் என பயந்து நான் அம்பிகாவை கொலை செய்துவிட்டேன்.
கொலை செய்தது எப்படி?
சேலத்திலிருந்து லோடு ஏற்றி கொண்டு மகராஷ்ட்ரா மாநிலத்தை நோக்கி நான் சென்று கொண்டிருந்தேன். அம்பிகாவை கிருஷ்ணகிரிக்கு வரவழைத்து, அங்கிருந்து அம்பிகாவையும் லாரியில் ஏற்றிக் கொண்டு மகாராஷ்ட்ராவுக்கு சென்று கொண்டிருந்தேன். கடந்த ஏப்ரல் 14-ந் தேதி மகாராஷ்டிர மாநிலத்திற்கு லாரியில் சென்றோம். லாத்தூர் பகுதியில் அம்பிகாவை கழுத்தை நெரித்து மயக்கமடைய செய்து, லாரியில் சமைக்க வைத்திருந்த மண்ணெண்யை அம்பிகா மீது ஊற்றி எரித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
கள்ளக்காதலால் சிறைவாசம்
பின்னர் அம்பிகாவின் செல்போனில் இருந்த சிம் கார்டை அகற்றிவிட்டு, கலியபெருமாள் தன்னுடைய சிம்கார்டை போட்டுள்ளார். லாரி லோடு பணி முடிந்துவிட்டு வீடு திரும்பியபோது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.