ஆளுநர் உரையை புறக்கணிக்க 3 விஷயம் தான் காரணம்... தமிமுன் அன்சாரி பேட்டி!
மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட 2 காரணங்களுக்காக ஆளுநர் உரையை புறக்கணித்ததான மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக, மரபுகளை மீறி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவதாலேயே ஆளுநரின் உரையை புறக்கணித்திருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல்கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் சட்டப்பேரவையில் தொடங்கியது. ஆளுநர் தன்னுடைய உரையைத் தொடங்கும் முன்னரே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் அமளியில் ஈடுபட்டதோடு, ஆளுநரின் உரையை புறக்கணித்தனர்.
இதே போன்று அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் ஆளுநரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சியின் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியதாவது :
மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக, மரபுகளை மீறி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வரும் கவர்னரின் உரையை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். மேலும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை "தேசிய பேரிடர் பாதிப்பு" மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம்.
இதே போன்று நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் 159 படகுகளையும், மீனவர்களையும் இலங்கை அரசு சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. அதை மத்திய அரசு மீட்டுத் தரவேண்டும் என கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு புறக்கணித்து வரும் நிலையில், மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படும் தமிழக கவர்னரின் உரையை மூன்று காரணங்களின் அடிப்படையில் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று தமிமுன் அன்சாரி கூறினார்.