அய்யயோ தெரியாமல் வாயை விட்டாச்சு.. ஒரு லட்சம் பேருக்கு நான் எங்கே போவேன்.. பம்மும் அழகிரி!
Recommended Video
சென்னை: அமைதிப் பேரணி மூலம் திமுகவில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்துவேன் என்று கொதித்து எழுந்த, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இப்போது அமைதியில் தஞ்சம் அடைந்து விட்டார்.
திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்தபோது கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. எவ்வளவோ முயன்றும் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளாத கருணாநிதி, தனக்கு பின்பாக திமுகவை தலைமை தாங்கப் போவது மு.கஸ்டாலின் தான் என்று அறிவித்தார்.
இந்த நிலையில்தான் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அழகிரி தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் அவர் நினைத்தது ஒன்று நடந்தது மற்றொன்று.
தர்மயுத்தம் பாணி
ஆகஸ்ட் 13ம் தேதி, கருணாநிதியின் நினைவிடத்திற்கு தனது மனைவி, மகன், மகளுடன் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அழகிரி, தனது தந்தையிடம் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாக ஆவேசமாக கூறியபோது, மெரினாவில் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய 'தர்மயுத்தத்தை' ஒப்பிட்டு ஊடகங்கள் அதை விவாத செய்தியாக மாற்றின.
பில்டப்புகள் அதிகம்
செப்டம்பர் 5ஆம் தேதி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன், கருணாநிதி நினைவிடத்திற்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாகவும் அந்த பேரணிக்கு பிறகு திமுகவில் வெறும் பிரளயம் ஏற்படும் என்றெல்லாம் கூறினார் அழகிரி. அழகிரியின் அடுத்தடுத்த பேட்டிகள் தேசிய ஊடகங்களின் கவனத்தை கூட ஈர்த்தது. ஆனால் இதெல்லாம் சில நாட்கள் மட்டும்தான். கருணாநிதியின் பதினாறாவது நாள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து மதுரை சென்ற அழகிரிக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.
விமான நிலையம் வெறிச்
மதுரை விமான நிலையத்தில் அழகிரியை வரவேற்க மொத்தமே 15 பேர்தான் கூடியிருந்தனர். மன்னர், கோபி, இசக்கிமுத்து போன்ற அவரது மிக நெருக்கமான ஆதரவாளர்கள் மட்டுமே அங்கு வந்திருந்தனர். திமுக கட்சியில் இருந்து, அதிலும் குறிப்பாக அவர் எதிர்பார்த்த தென் மாவட்டத்தில் இருந்து எந்த நிர்வாகியும் ஏர்போர்ட்டுக்கு கூட வரவில்லை.
ஆலோசனை ஓகே, கூட்டம் எங்கே
இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு, கடந்த 24ம் தேதி முதல், அமைதி பேரணி குறித்து மதுரையில் ஆலோசனை நடத்தி வருகிறார் அழகிரி. டிவிஎஸ் நகரில் உள்ள தனது திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்த முதலில் முடிவு செய்தார். ஆனால் அவர் நினைத்தபடி ஆதரவாளர்களும், திமுக நிர்வாகிகளும் வரவில்லை. தினமும் நாலைந்து பேர் மட்டுமே அவரை சந்திக்க வந்து செல்கின்றனர். கல்யாண மண்டபத்தை வாடகைக்கு விட்டால் வருமானமாவது வரும் என்பதை புரிந்து கொண்ட அழகிரி, வீட்டுக்கு எதிரே பந்தலின்கீழ் அமர்ந்து, இந்த நாலைந்து பேருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
நிருபர்கள் விரட்டியடிப்பு
ஆதரவு இல்லை என்பது வெளி உலகிற்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அழகிரியின், ஆலோசனை கூட்டங்களுக்கு செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்கள் விரட்டியடிக்கப்படுவது தினமும் தொடர்கதையாகி வருகிறது. ஆலோசனைக்கே நாலு பேர்தான் வருகிறார்கள். எனவே, சென்னையில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள பேரணிக்கு ஆள் திரட்டுவதற்கு அழகிரி பெரும் பாடுபட்டு வருகிறார். திமுக நிர்வாகிகள் அனைவருமே, அதன் தலைவர் ஸ்டாலின் பின்னால் ஓரணியில் திரண்டு விட்டனர். எனவே அழகிரிக்கு ஆதரவு தெரிவிக்க யாரும் முன் வரவில்லை.
ஏற்பாடு செய்வது யார்
அதிமுகவில் தினகரன் எப்படி ஒரு வாக்கு வங்கியை தனக்காக உருவாக்கினாரோ, அப்படி திமுகவில் அழகிரியால் உருவாக்க முடியவில்லை. பேரணிக்கு ஒரு லட்சம் பேரை 'ஏற்பாடு செய்து' அழைத்துச் செல்ல, வாகன வசதி ஏற்பாடு, அவர்களுக்கான சாப்பாடு ஏற்பாடு, இன்னபிற வசதிகள் ஆகியவற்றை செய்து கொடுப்பதற்கு நிர்வாகிகள் இன்றி தவிக்கிறார் அழகிரி. தனது உண்மை நிலவரத்தை புரிந்துகொண்ட அழகிரி, இன்று அளித்த பேட்டியில் குறைந்தபட்சம் என்னை திமுகவிலாவது சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சலாக கேட்கும் நிலையை பார்க்க முடிந்தது. ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்றும், கூறியுள்ளார். கருணாநிதியை தவிர யாரையும் தலைவராக ஏற்க முடியாது என கடந்த 2ம் தேதி கூறிய அதே அழகிரிதான், 30ம் தேதியான இன்று, இப்படி கூறியுள்ளார்.
கைவிட்ட குடும்பம்
மேலும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது கருணாநிதிக்கான அஞ்சலி பேரணிதான் என்று சொல்லி, நைசாக பம்மியுள்ளார் அழகிரி. குடும்ப உறுப்பினர்கள் மூலமாக தூதுவிட்டு பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. கனிமொழியும், ஸ்டாலினுக்கு எதிராக கிளம்பவில்லை. குடும்பமும் சரி, கட்சியும் சரி, ஸ்டாலினுக்கு பின்னால் ஓரணியில் நிற்கிறது. இனி என்னதான் செய்வார் அழகிரி? செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் எத்தனை பல்டி அடிக்கப் போகிறாரோ என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.