அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் மு.க.அழகிரி.. தமிழக அரசியலில் தர்மயுத்தம் பார்ட் -2
சென்னை: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கியது போல், திமுகவில் மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தி உள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்குதல்கள் வந்தன.
முதல்வர் பதவியை இழந்த பன்னீர்செல்வம் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று, சுமார் 40 நிமிடங்கள் தியானத்தில் இருப்பது போல அமர்ந்தார்.
தியானம்
அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததாகவும், அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பரபரப்பு தகவல்களை அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
குமுறிய பன்னீர்செல்வம்
தன்னை முதல்வராகிய அவர்களே, இப்போது ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக அதிமுகவில் சிலர் பிரிந்து சென்றனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது ஓபிஎஸ் தரப்பு.
இணைந்த கரங்கள்
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அதிமுக கட்சிக்கு, பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர். இந்த நிலையில் அதே மெரினாவில் இன்று மற்றொரு முக்கிய கட்சியான திமுகவின் ஒரு முன்னாள் முக்கிய நிர்வாகியான அழகிரி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ஜெயலலிதாவிடம், சமாதியில் அமர்ந்து பேசியதாக பன்னீர்செல்வம் கூறியது போல, தனது தந்தை கருணாநிதியிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக அழகிரியும் கூறினார்.
தலைவர்கள் மறைவின்போதெல்லாம்
இங்கும், கட்சியின் முக்கிய பதவி தான் பிரச்சனை. திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்து வந்தவர் அழகிரி. ஆனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அழகிரி நடுவேயான விரிசல் காரணமாக அழகிரியை கட்சியை விட்டு நீக்கினார் கருணாநிதி. நாளை திமுகவின் செயற்குழு கூட உள்ள நிலையில் அழகிரி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கடந்த முறை அதிமுகவில் ஒரு தர்மயுத்தம் தொடங்கியதை போல இப்பொழுது திமுகவில் ஒரு தர்மயுத்தம் தொடங்கியுள்ளது. பெரிய தலைவர்கள் மறைவின்போது அவர்களின் கட்சிக்குள் கிளர்ச்சிகளும், கருத்து மோதல்களும் ஏற்படுவது தமிழக அரசியலில் ஒரு சாபக்கேடாக மாறி உள்ளது என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்