திமுகவில் சேர்ப்பதாக தெரியவில்லை.. செப்.5-ஆம் தேதிக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை.. அழகிரி ஆவேசம்
மதுரை: செப்டம்பர் 5ம் தேதி கருணாநிதி நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அழகிரி. அப்போது நிருபர்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கூறுகையில்,
எனது மனக்குமுறலை நேரம் வரும்போது வெளிப்படுத்துவேன். அவர் என்னை திமுகவில் சேர்ப்பது போல் தெரியவில்லை. செப்டம்பர் 5ம் தேதிக்கு பிறகு பல மாவட்டங்களிலும் உள்ள முக்கியஸ்தர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.
சென்னையில், அண்ணா சிலை அருகில் இருந்து பேரணி புறப்பட்ட அனுமதி கேட்டோம். ஆனால் கொஞ்சம் தள்ளி திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே இருந்த பேரணியை துவக்க காவல்துறை அனுமதி கொடுக்கலாம் என தெரிகிறது.
போக்குவரத்து பிரச்சனைகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.
ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகம் உள்ளது போன்ற பிம்பம் உள்ளதே என்ற நிருபர் கேள்விக்கு, "நீங்கள் என்னைப் பற்றி கேட்கிறீர்களா, அவரை பற்றி கேட்கிறீர்களா? பேரணி பற்றி கேட்பதாக சொல்லிவிட்டு ஊரணியை பற்றி கேட்கிறீர்களே" என்று பதிலளித்தார் அழகிரி.