என்னை ஒரு மகன் போலத்தான் நடத்தினார் சோனியா.. நெகிழும் அழகிரி
மதுரை: என்னை ஒரு மகன் போல் சோனியா காந்தி நடத்தினார் என்று மு. க. அழகிரி தெரிவித்தார்.
செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்திய பேரணி குறித்து மு.க.அழகிரி ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ராகுல் காந்தியுடன் எனக்கு அந்தளவுக்கு பழக்கம் இல்லை. ஆனால் அவரது தாய் சோனியாவுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு.
என்னை அவரது மகன் போல் நினைத்தார். அவர் மட்டுமல்ல மன்மோகன் சிங்கும் என்னை மத்திய அமைச்சராகவே நடத்த மாட்டார். சொந்த மகனாகவே நினைத்தார். எனது ராஜினாமா கடிதத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த போது அவர் கண்கள் கலங்கின.
என் தந்தை கருணாநிதியை அவர் தந்தையாகவே கருதினார். அதனால் நாங்கள் பிரிவதை எண்ணி அவர் வருந்தினார். அந்தளவுக்கு எங்களுக்குள் நெருக்கம் இருந்தது.
எனது எதிர்கால திட்டம் குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை. எனினும் புதிய கட்சியை தொடங்கும் எண்ணம் இல்லை என்றார் அவர்.