இதோ ஒன்றரை லட்சம் பேர் இருக்காங்க!.. அவங்களையெல்லாம் நீக்குவார்களா?- திமுகவுக்கு அழகிரி கேள்வி
Recommended Video
சென்னை: கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமே எனது நோக்கம் என்றும் இன்று வந்த ஒன்றரை லட்சம் ஆதரவாளர்களையும் திமுக நீக்கிவிடுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி மரணமடைந்த சில நாட்களில் கட்சி மற்றும் குடும்ப ரீதியாக அழகிரி பிரச்சினைகளை எழுப்பினார். திடீரென கருணாநிதியின் சமாதிக்கு வந்த அழகிரி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பேன் என்றும் எனது பலத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தும் அமைதி பேரணி மூலம் ஒரு லட்சம் பேரை அழைத்து வந்து நிரூபிப்பேன் என சவால் விடுத்தார்.
பேரணி தொடக்கம்
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இன்றைய தினம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து தனது பேரணியை தொடங்கினார்.
அழகிரி பேட்டி
சுமார் 2 மணி நேரங்கள் கழித்து கருணாநிதியின் சமாதியை அடைந்தார். அங்கு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தந்தை கருணாநிதியின் 30-ஆவது நினைவு நாளையொட்டி அமைதி பேரணி நடத்தப்பட்டது.
நன்றி
இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த பேரணியில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய ஊடகங்கள், காவல் துறையினருக்கும் நன்றி என தெரிவித்தார்.
கேட்டு சொல்லுங்கள்
இதையடுத்து தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கட்சி நிர்வாகி ரவியை திமுக நீக்கியுள்ளதே அது குறித்து தங்கள் கருத்து என்ன செய்தியாளர்கள் வினவினர். அதற்கு அவர் இங்கு எனக்கு ஆதரவாக ஒன்றரை லட்சம் பேர் வந்துள்ளார்கள். அவர்களை எல்லாம் நீக்குவார்களா என கேட்டு சொல்லுங்கள் என்றார்.
பரபரப்பு
இன்று தனது ஆதங்கத்தை சொல்வேன் என்று அழகிரி முன்னரே கூறியிருந்ததால் ஏதேனும் பரபரப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெறும் நன்றி அறிவிப்பு பேரணியாக மாறியதில் அழகிரியின் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.