ரைட்டு.. "மதுரை எக்ஸ்பிரஸ்" திருவாரூர் போவது கன்பர்ம்ட்..!
திருவாரூரில் அழகிரி போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை: திருவாரூரில் அழகிரி களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அறிவிப்பு மட்டும்தான் பாக்கி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, திருப்பரங்குன்றத்தில் திமுக 4 ஆவது இடத்தில்தான் வரும் என்றார். இதாவது பரவாயில்லை, திருவாரூரில் திமுக ஜெயிக்கவே முடியாது என்று ஆரூடமே சொல்லியிருந்தார். வரப்போகிற 2 தேர்தல்களில் திமுக தோற்றால்தான் தன் பலம் என்ன என்பது ஸ்டாலினுக்கு தெரியும் என்றும் அழகிரி சொல்லியிருந்தார். இதை எல்லாமே ஒரு கணக்குடன்தான் அழகிரி பேசியிருக்கிறார் போலும்.
திருவாரூரில் அழகிரி
ஸ்டாலினுக்கும் அவரது தலைமையிலான திமுகவுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்த பல வியூங்களை கையில் எடுத்து வருகிறார். மதுரையில் ஆலோசனைகூட்டம், தேனியில் ஆலோசனை கூட்டம் என்று இறங்கினார். அடுத்ததாக இன்றைக்கு திருவாரூரில் காலடி எடுத்து வைத்து, தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.
கண்டிப்பாக வருவேன்
இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, எத்தனை பேர் வருவார்களோ தனக்கு தெரியாது என்றும் வருபவர்கள் 40 பேராக இருந்தாலும் சரி, 400 பேராக இருந்தாலும் சரி, கூட்டம் நடத்தியே தீருவேன் என்றும் காட்டமாக அழகிரி சொல்லிவிட்டாராம். அப்போதே திருவாரூரில் அழகிரி எதையோ சொல்ல போகிறார் என்று கட்சி வட்டாரத்திற்குள் தெரிந்துவிட்டது.
மக்கள் எனக்குதான் ஆதரவு
மேலும் கருணாநிதி மறைவுக்கு பிறகு திருவாரூரில் ஆலோசனை என்பதால் இந்த கூட்டம் அதிகமாகவே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதுகுறித்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார். இதற்காக திருவாரூர் மக்களிடம் பேசி வருகிறேன் என்றும் திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்படும்போது என் முடிவை அறிவிப்பேன் என்றும் சொல்லி இருக்கிறார். அப்படி நான் திருவாரூரில் போட்டியிட்டால் அனைத்துக் கட்சி தலைவர்கள் உட்பட மக்கள் எல்லோருமே எனக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பிக்கையாகவே அழகிரி சொல்லி இருக்கிறார்.
சாதி ரீதியான ஓட்டுக்கள்
அழகிரியின் இந்த அதீத நம்பிக்கைக்கு காரணம் கருணாநிதியின் மகன் என்பதையும் தாண்டி, தன் சாதி ரீதியான ஓட்டுக்களும், மனைவியின் சாதி ரீதியான ஓட்டுக்களும் பெருவாரியாக விழும் என்றே நினைக்கிறாராம். எப்படியோ கிட்டத்தட்ட திருவாரூர் தொகுதியில் அழகிரி நிற்பதாக முக்கால்வாசி தெரிந்துவிட்டது. இன்னும் பெயரளவிற்கு ஒரு அறிவிப்பு மட்டும்தான் பாக்கி.
நான்குமுனை போட்டி
ஒருவேளை அழகிரி திருவாரூரில் களமிறங்கிவிட்டால் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. அழகிரி திருவாரூரில் போட்டி என்பதை அறைகுறையாக இப்போது சொல்லியிருப்பதே திமுகவை பலவாறாக கண்டிப்பாக யோசிக்க வைக்கும். இதுபோக, ஒருபக்கம் அதிமுக, மற்றொரு பக்கம் பாஜக, இதற்கு நடுவில் தினகரன் போன்றோரை சமாளிக்க உள்ள நிலையில் அழகிரியும் திருவாரூரில் களமிறங்கிவிட்டால், இந்த நான்முனை போட்டிகளையும் திமுக எப்படி எதிர்கொள்ள போகிறதோ தெரியவில்லையே என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொகுதி மக்களிடம் தொக்கி நிற்கிறது.