மதுரையில் மு.க. ஸ்டாலினை சந்தித்து அணி மாறிய அழகிரி ஆதரவாளர் மிசா பாண்டியன்!
சென்னை: மதுரை சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை மிசா பாண்டியன் உள்ளிட்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து அணி மாறியிருக்கின்றனர்.
மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் திமுகவினர் அழகிரி-ஸ்டாலின் என இரு அணிகளாகவே செயல்பட்டு வந்தனர். அழகிரியின் ஆதரவாளர்கள், ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பதும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பதும் தொடர்ந்து வந்தது. கட்சிக்குள் எவ்வித பிளவும் கிடையாது என்று திமுக தலைமை கூறிவந்தாலும் இரு அணிகளாகவே செயல்பட்டு வந்தனர்.
ஸ்டாலின் முகாமுக்கு மாற்றம்
மதுரை திமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிர முயற்சியில் இறங்கினார். இதனால் அழகிரி ஆதரவாளர்களில் பலர் ஸ்டாலின் அணிக்கு மாறினர்.
அழகிரி டிஸ்மிஸ்
லோக்சபா தேர்தலின்போது அழகிரி-ஸ்டாலின் மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. வேட்பாளர் தேர்வில் கட்சித் தலைமை முடிவுகள் குறித்து விமர்சனம் செய்ததைத்தொடர்ந்து அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
எஸ்ஸார் கோபி
இதன் பிறகு அழகிரி ஆதரவாளர்களில் பலர், ஸ்டாலின் அணிக்கு மாறினர். அழகிரியின் நெருங்கிய ஆதரவாளராக இருந்த எஸ்ஸார் கோபி லோக்சபா தேர்தலின்போது ஸ்டாலினை சந்தித்து, தேர்தல் பணிகளில் ஸ்டாலின் அணியினருடன் இணைந்து பணியாற்றினார்.
ஸ்டாலினுடன் மிசா பாண்டியன் சந்திப்பு
அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்த திமுக நிர்வாகிகள் பலரும் ஒவ்வொருவராக ஸ்டாலின் அணி பக்கம் வந்துவிட்டனர். இந்நிலையில் அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன், மதுரை வந்த ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள்
அவருடன் அழகிரி ஆதரவாளர்கள் பலரும் ஸ்டாலினை சந்தித்து அணி மாறிவிட்டோம் என்பதை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் மதுரையில் நடைபெற்ற ஸ்டாலின் பொதுக்கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டனர். இதனால் மதுரை திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.