ரேஷன் கடைகள் முன் திமுக போராட்டம்... தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
ரேஷன் கடைகளில் மக்களுக்கு சரிவர பொருட்கள் கிடைக்காமல் இருக்கும் நிலையை ஒரு வாரத்திற்குள் அரசு சரி செய்யாவிட்டால் திமுக சார்பில தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: ரேஷன் கடைகளில் மக்களுக்கு சரிவர பொருட்கள் கிடைக்காமல் இருக்கும் நிலையை ஒரு வாரத்திற்குள் அரசு சரி செய்யாவிட்டால் திமுக சார்பில தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்குள்ள ரேஷன் கடைகளில் திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆய்வு நடத்தினர்.
அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த புகாரின் அடிப்படையில், தான் வெளியிட்ட அறிக்கைக்கு அந்த துறை அமைச்சர் காமராஜூம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூம் முறையான விளக்கமளிக்காமல் தான் இதை அரசியல் ஆக்குவதற்காகப் பொய் சொல்லி மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என கூறினார்.
இந்நிலையில், இன்று தனது கொளத்தூர் தொகுதியில் ஆய்வு நடத்தியபோது, அங்குள்ள ரேஷன் கடைகளுக்கு சரிவர பொருட்கள் வருவதில்லை என்பதை ரேஷன் கடை ஊழியர் ஆதாரத்துடன் தன்னிடம் எடுத்துக் காட்டியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிலை தமிழகம் முழுவதும் நிலவுவதாக கூறிய அவர், திமுகவின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையை தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் சீர் செய்யாவிட்டால் திமுக சார்பில் அறப்போராட்டம் நடப்பது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.