மதுரை குலுங்க .. "அண்ணன்" அதிர .. 100 ஏக்கரில் மே 23-ல் பிரமாண்ட "ஸ்டாலின்" மாநாடு!
மதுரை: தி.மு.க.வில் இருந்து அழகிரி இருந்து முற்றாக வெளியேற்றப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டநிலையில் மதுரையில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த அக்கட்சியினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தென்மாவட்ட தி.மு.க.வினர் சுமார் 5 லட்சம் பேர் இம்மாநாட்டில் பங்கேற்கும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க. தயார் ஆகி வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வாய்ப்பு உள்ளது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வருகிற 23- ந்தேதி தி.மு.க. சார்பில் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
தென்மாவட்ட தி.மு.க. தொண்டர்களை ஒருங்கிணைத்து இக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள இப் பொதுக்கூட்ட மேடைக்கு பந்தல் கால்நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்து 5 லட்சம் தொண்டர்களை அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான வாகனங்களில் இவர்கள் வருகை தர உள்ளனர்.
இதற்காக மதுரை யானை மலை ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை அருகில் 100 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயாராகி வருகிறது. இங்கு 120 அடி நீளம், 32 அடி அகலம் கொண்ட பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி நடைபெறுகிறது. தொண்டர்களுக்கு இருக்கை வசதி, குடிநீர் வசதி போன்றவையும் செய்யப்படுகிறது. வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பொதுக்கூட்ட மைதானம் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுக்கூட்டத்துக்கு வரும் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் அலங்கார வளைவுகள், கொடி தோரணங்களும் அமைக்கப்படுகின்றன. தி.மு.க. இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையுடன் மு.க.ஸ்டாலின் உருவம் பதித்த பனியன் அணிந்து பங்கேற்கிறார்கள்.
மகளிர் அணியினர் தி.மு.க. பார்டருடன் கூடிய சேலை அணிந்து வருகிறார்கள். இதுபோல் மற்ற அணியினரும் தனித்தனி சீருடை அணிந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி மேற்பார்வையில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மு.க. அழகிரியின் கோட்டை என்று சொல்லப்பட்ட மதுரையில் மு.க.ஸ்டாலின் பலத்தை நிரூபிக்க அவரது ஆதரவாளர்கள் ஜரூராக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.