தள்ளாத வயதிலும் அண்ணாவை நினைத்து கண்கலங்கிய கருணாநிதி: ஸ்டாலின் உருக்கம்
தள்ளாத வயதிலும் அண்ணாவை நினைத்து கருணாநிதி கண்கலங்கினார் என்று அவரை நினைத்து ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
ஈரோடு: முடியாத நிலையிலும் அண்ணா என்ற பெயரை சொன்னால் போதும் கருணாநிதி கண் கலங்குகிறார் என்று அவரை நினைத்து ஸ்டாலினும் உருக்கமாக பேசினார்.
ஈரோட்டில் 2 நாட்கள் நடைபெற்ற திமுக மண்டல மாநாடு இன்றுடன் முடிவடைந்தது. அப்போது ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் கருணாநிதி குறித்து சில விஷயங்களை சொன்னபோது அவரையே அறியாமல் கண்கலங்கி உருக்கமாக பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி களஆய்வு பணிகளை நான் தொடங்கினேன். பிறகு அடுத்த நாளே நானும் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றோம்.
முரசொலியை பார்த்தார்
அப்போது என்னை பார்த்து சிரித்த கருணாநிதி என் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டார். உடனே களஆய்வு நடத்திய புகைப்படங்கள் வெளிவந்த முரசொலி நாளிதழை எடுத்து துரைமுருகன், கருணாநிதியிடம் கொடுத்தார்.
அண்ணா நினைவுநாள்
அப்போது என் கையை அழுத்தி அழுத்தி பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அண்ணா நினைவு நாளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் வருவீர்கள், ஆனால் நீண்ட காலமாக உங்களால் வரமுடியவில்லை என்று கருணாநிதியிடம் துரைமுருகன் தெரிவித்தார்.
மீட்டிங்கா என்கிறார்
உடனே அவர் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் வருகிறது. நாங்களும் அழுது விட்டோம். என்னால் அங்கு இருக்க முடியாததால் நான் புறப்படுகிறேன் என்றேன், எங்கே மீட்டிங்கா என்று கேட்கிறார். ஒரு மணி நேரம் மட்டுமே அவரால் உட்கார முடியும்.
மாநாடு என்றால் எங்கே
இந்த நிலையிலும் அண்ணா என்றால் கண்ணீர் விடுகிறார், அண்ணா அறிவாலயத்துக்கு வருகிறீர்களா என்றால் எப்போது என்று கேட்கிறார், களஆய்வு பணி நடத்தினால் கையை பிடித்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுகிறார். மாநாட்டு கூட்டத்துக்கு வருகிறீர்களா என்றால் எங்கே மாநாடு என்கிறார்.
கருணாநிதிக்கு பரிசு
இந்த நிலையிலும் கட்சி, ஆய்வு, அண்ணா என்று பேசும் கருணாநிதிக்கு நாம் பெருமை சேர்க்க அவர் வாழும் காலத்திலேயே மீண்டும் திமுக ஆட்சி உருவாகி இருக்கிறது என்ற பெருமையை பரிசை நாம் ஒப்படைக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். கருணாநிதி குறித்து ஸ்டாலின் பேசும்போது கண்கலங்கிய நிலையில் மிகவும் உருக்கமாக பேசினார்.