வெற்றிடம் உருவானால் உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்- ரஜினி மீது ஸ்டாலின் பாய்ச்சல்
ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு: தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக ஒருவர் கூறுகிறார், ஆனால் ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல் என்று ரஜினிகாந்தை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.
இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் பேசுகையில், தமிழ் மண்ணில் மதவாதத்தை நுழையவிடமாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கைக்கு எதிராக வாலை ஆட்ட முடியாது.
வாலை ஆட்ட நினைத்தால் வாலை ஒட்ட நறுக்குவோம். முதல்வர் கனவுடன் கட்சிகள் தொடங்குகின்றனர்.
மீனம், மேஷம் என சிலர் ராசி பார்த்து கட்சி தொடங்க காத்திருக்கின்றனர். நான் அங்கும் இல்லை... இங்கும் இல்லை..மதில் மேல் பூனையாக ஒருவர் இருக்கிறார்.
வெற்றிடத்தை நிரப்பப் போவதாக இன்னொருவர் பேசுகிறார். ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவில் வெற்றிடம் என்பது இல்லை. கருணாநிதி போட்ட பட்ஜெட்டை பின்பற்றிதான் மத்திய பட்ஜெட் போடுகிறார்கள் என்றார் ஸ்டாலின்.