குழந்தையை கொஞ்சுதல், மக்களுடன் கைகுலுக்குதல்... தூள் கிளப்பும் மு.க.ஸ்டாலினின் ஆர்கே நகர் பிரசாரம்
குழந்தையை கொஞ்சுவது, பொதுமக்களுடன் உற்சாகமாக கை குலுக்குவது உள்ளிட்ட வகையில் ஆர்கே நகரில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
சென்னை: சென்னை ஆர்கே நகரில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆர்கே நகரில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவை எப்படியாயினும் வீழ்த்தியே தீரவேண்டும் என்று திமுகவும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று அதிமுகவும் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன.
நீட் தேர்வு, ஜெயலலிதா மரண விவகாரம், ஊழல் ஆகியவற்றை திமுக முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதுபோல் திமுகவின் ஊழல் குறித்து அதிமுகவும் பிரசாரம் செய்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தில் புகார்
பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் கடந்த இரு தினங்களாக அதிமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலை ஜனநாயக முறைபடி நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஸ்டாலின் பிரசாரம்
ஆர்கே நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வருகிறார். அதுபோல் அவர் வாட்ஸ் ஆப் மூலம் பிரசாரம் செய்யும் ஆடியோ காட்சிகளும் வைரலாகி வருகிறது. கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகிறது.
பெண்கள் ஆரத்தி
பிரசாரத்துக்கு வந்த மு.க.ஸ்டாலினை பார்க்க ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூடினர். சில பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். குழந்தைகள், பெரியவர்கள் என ஸ்டாலினை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் குழுமினர்.
உச்சிமுகர்ந்த ஸ்டாலின்
ஆர்கே நகர் தொகுதிக்குள்பட்ட ஒரு இடத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய வந்தபோது அவரிடம் ஒரு குழந்தையை கொடுத்து ஆசி வழங்க தொண்டர் ஒருவர் கூறினார். அதையேற்று குழந்தையை பெற்றுக் கொண்ட ஸ்டாலின் அதற்கு உச்சி முகர்ந்து முத்தமிட்டார். வேனில் பிரசாரம் செய்யும் போது பேருந்துகளில் உள்ளவர்கள் ஸ்டாலினுக்கு கை கொடுத்தனர்.
திமுகவுக்கு பிரசாரம்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அதிமுக ஆட்சியின் அவலம் குறித்தும் பாஜகவின் மறைமுக தலையீடால் மக்கள் படும் பாதிப்புகள் குறித்தும் அவர் பேசினார். பிரசாரத்தில் ஒருவரை மாற்றி மாற்றி ஒருவர் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என அதிமுகவும் திமுகவும் கூறி வருகின்றன. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.