பெரும்பான்மையிருந்தா எதை வேணாலும் செய்வீங்களா?.. பாஜகவை விளாசிய ஸ்டாலின்
சென்னை: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையிருந்தால் எதை வேண்டுமானாலும் செய்வீர்களா என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை தொடங்கியது. இதில் முதன்மை பொதுச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை அளித்து பேசினார்.
இதில் இறுதியாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில் இந்திராகாந்தி, வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் பிரதமராக முக்கிய காரணமாக இருந்தவர் கருணாநிதி.
அதுமட்டுமல்ல தேசிய அரசியலை தீர்மானிக்கும் கலங்கரை விளக்கமாகவும் இருந்தார். மத்தியிலுள்ள அரசு 3 ஆண்டு ஆட்சியில் என்ன செய்துள்ளார்கள்? மக்களை பற்றி கவலைப்பட்டுள்ளார்களா?
பெரும்பான்மை உள்ள காரணத்தால் எதை வேண்டுமானாலும் செய்துவிடமுடியுமா? லோக்சபா தேர்தலின்போது மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றார்கள். கருப்பு பணத்தை மீட்போம் என்றார்கள்.
கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கிக் கணக்கில் தலைக்கு ரூ.15 லட்சம் போடுவோம் என்றார்கள். இன்று ரூ.15-ஆவது வங்கிக் கணக்கில் மத்திய அரசால் போடப்பட்டதா?
ஊழலை ஒழிக்கும் வல்லமை படைத்த லோக்பால் உருவாக்கப்பட்டதா? மத்திய பாஜக அரசு, இந்தியாவை மதவாத நாடாக மாற்ற பாடுபடுகிறது. மதத் தலைவர்கள் தலைமையில் ஒவ்வொரு மாநிலத்தையும் சிக்க வைத்துள்ளனர்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மதசார்பின்மை என வரும்போது அனைவரும் ஒன்றுபட வேண்டும். நமக்குள் எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்பதை விழா மேடை எடுத்து காட்டுகிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க வேண்டியது நமக்கு முன்பு உள்ள பெரும் சவால் என்றார் ஸ்டாலின்.