அடுத்தவர் குழந்தைக்கு தன் பெயரை வைக்க ஆசைப்படுவதா?.. ஸ்டாலின் கேள்வி
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவது என்பது அடுத்தவர் குழந்தைக்கு தன் பெயரை வைக்க ஆசைப்படுவது என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கினார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவோம் என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் ஜெயலலிதா அம்மையார் இருக்கும்வரை எம்.ஜி.ஆரைப் புறக்கணித்துவிட்டு, இன்று தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற மேக்கப் போட்டு முதல்வர் - துணை முதல்வர் - பின்னணிப் பாடகரான ஒரு அமைச்சர் உள்ளிட்ட அத்தனை பேரும் அரசு விழா மேடையில் அசத்தலான நடிகர்களாகியிருக்கிறார்கள்.
வரலாறு எல்லோருக்கும் தெரியும்
ஏதோ எம்.ஜி.ஆருக்கு இவர்கள்தான் பெருமை சேர்க்கிறார்கள் என்பதுபோல, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தலைவர் கலைஞர் அவர்களின் திட்டப்படி - அவரது வழிகாட்டுதல்படி - அவரது மேற்பார்வையுடன் 1996-2001 கழக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற வரலாறு எல்லோருக்கும் தெரியும்.
பேருந்து நிலையம்
அதற்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டுகிறார்களாம். ஏன், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவித்தாரே சென்னை வண்டலூர் அருகே மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையம் உருவாக்கப்படும் என்று! அது என்னவாயிற்று?
குழந்தைக்கு பெயர் வைப்பு
தங்கள் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தை நிறைவேற்றி, அதற்கு தங்கள் கட்சியின் நிறுவனர் பெயரைச் சூட்ட வக்கற்ற - வகையற்ற ஆட்சியாளர்கள் தான், கலைஞர் ஆட்சிக் காலத்தில் நிறைவடைந்து பயன் தந்த ஒரு திட்டத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டி, அடுத்தவர் குழந்தைக்குத் தன் பெயர் வைக்க ஆசைப்படுகிறார்கள்.
முதல்வர்
ஆட்சியாளர்களின் லட்சணம் எப்படி இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தினால், வாயைத் திறந்தாலே மு.க.ஸ்டாலின் பொய் பேசுகிறார் என்று அரசு விழாவில் அப்பட்டமான அரசியல் பேசுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஸ்டாலின் அறிக்கை
அ.தி.மு.க. ஆட்சியாளர்களெல்லாம் அரிச்சந்திரனின் நேரடி வாரிசுகள் என்பதாக நினைத்துக்கொண்டு பழனிசாமி பேசிய நாளிலேயே, அவர்களின் லட்சணம் என்ன என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறது என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.