மோடி எதை விரும்புகிறாரோ அதைத்தான் மக்களும் சாப்பிட வேண்டுமா?.... ஸ்டாலின் காட்டம்
மோடி எதை விரும்புகிறாரோ அதைத்தான் நாட்டு மக்களும் சாப்பிட வேண்டுமா? என்று மு.க. ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி எதை விரும்புகிறாரோ அதைத்தான் நாட்டு மக்களும் சாப்பிட வேண்டுமா என்று மு.க. ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
எருது, பசு, காளை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக கொல்லக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரை ஆங்காங்கே மாட்டுக் கறி உணவுத் திருவிழா நடத்தப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் மத்திய அரசின் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
7 கட்சிகளின் கூட்டறிக்கை
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் (திமுக), திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), முத்தரசன் (இ.கம்யூ), தொல் திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), கே.எம். காதர்மொகிதீன் (இந்தியன் முஸ்லீம் லீக்) மற்றும் எம்.எச். ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் கூட்டாக அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளனர். அதில் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இன்று ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அதிகாரம் கிடையாது
அப்போது அவர் கூறுகையில், மாட்டிறைச்சியை தடை செய்ய மத்திய அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. மத்திய அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை மக்களுக்கான எந்த திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தவில்லை. மோடி அரசில் மாநில முதல்வர்கள் நகராட்சி தலைவர் போலும், மாநில அரசுகள் நகராட்சிகள் போலும் செயல்படுகின்றனர்.
விவசாயிகள் பாதிப்பு
வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்தன. இந்நிலையில் அவர்களை மேலும் துன்புத்தும் விதமாக மாட்டிறைச்சிக்கான தடையை மத்திய அரசு விதித்துள்ளது என்றார் மு.க.ஸ்டாலின்.