பணத்தை பறிமுதல் செய்த கரூர் எஸ்.பியை சுட்டுக் கொல்ல முயற்சி- ஸ்டாலின் கண்டனம்
சங்கரன்கோவில்: வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்த பணத்தை பறிமுதல் செய்த கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டேவை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்துள்ளது; வந்திதா பாண்டேவுக்கு ஏதேனும் நேர்ந்தால் முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் பிரசாரம் தொடங்கிய மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.30 மணி அளவில் சங்கரன்கோவில் தேரடி திடலில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். அங்கு வேட்பாளர் அன்புமணி கணேசனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கரூரில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் சோதனை நடத்தி ரூ.5 கோடியை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளார்கள். அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொல்ல தற்போது முயற்சி நடந்துள்ளது.
இதுதொடர்பாகவும், அ.தி.மு.க.வினர் பணம் பதுக்கல் சம்பந்தமாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குலாம்நபி ஆசாத், டி.ஆர்.பாலு ஆகியோர் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து இருக்கிறார்கள். அது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொலை முயற்சிக்கு உள்ளான அந்த போலீஸ் அதிகாரிக்கு ஏதாவது நேர்ந்தால், ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும். எங்களது புகார் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு இல்லை என்றால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.