ரேசன் சர்க்கரை விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்- பொதுவிநியோக திட்டம் ரத்தாகுமோ என அச்சம்!
ரேசனில் சர்க்கரை விலை இரு மடங்கு உயர்வுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ரேசன் கடைகளில் சர்க்கரை விலை ரூ25 உயர்த்தப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரேசன் கடைகளில் ரூ13.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சர்க்கரை திடீரென இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களை இந்த விலை உயர்வு கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.
ஆனால் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவோ, இந்த விலை உயர்வு சாதாரணமானதுதான் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ரேசன் சர்க்கரை விலை உயர்வுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
ரேசன் கடைகளில் சர்க்கரை விலையை 13 ரூபாய் 50 பைசாவிலிருந்து, 25 ரூபாயாக உயர்த்திய 'குதிரை பேர' அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் பொது விநியோகத் திட்டத்துக்கு ஏற்படும் மோசமான பாதிப்பு பற்றி கவலைப்படாமல், கையெழுத்துப் போட்ட 'குதிரை பேர' அரசின் கையாலாகாதத்தனத்தால் இன்றைக்கு ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை விண்ணளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் மன்னிக்கமாட்டார்கள்
ஒரு கிலோ சர்க்கரையை 25 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். சர்க்கரை மான்யம் உள்ளிட்ட அனைத்து மான்யங்களும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டதால் பாதிக்கப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், பல்வேறு கட்சிகளின் சார்பிலும் எச்சரிக்கை செய்தபோது, "ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இன்றைய விலைக்கே கொடுக்கப்படும். பொது விநியோகத் திட்டம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது", என்று ‘குதிரை பேர' அரசு கூக்குரலிட்டதே தவிர, மத்திய நிதிநிலை அறிக்கையில் சர்க்கரை மான்யத்திற்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டபோது கூட இந்த அரசின் அமைச்சர்களோ, முதலமைச்சரோ குரல் எழுப்பாமால் மத்திய பா.ஜ.க. அரசிடம் மண்டியிட்டு பதவியில் அமர்ந்திருப்பதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
ஓபிஎஸ் கையெழுத்திட்டார்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் கடுமையாக எதிர்த்தார். ஆனால், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ரகசிய மாக இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவர் அன்று முதலமைச்சர் பொறுப்புகளை கவனித்துவந்த இன்றைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு பதவிக்கு வந்த இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மான்யங்கள் இந்தச் சட்டத்தால் பறிபோவதுப் பற்றி கவலைப்படவில்லை.
மோசடி வழக்கு
தங்கள் மீதுள்ள வருமான வரித்துறை வழக்குகளில் இருந்து தப்பிக்க மாநில உரிமைகள், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மான்யங்கள் போன்றவற்றை வரிசையில் நின்று மத்திய பா.ஜ.க. அரசிடம் சரண்டர் செய்வதற்கு சம்மதிக்கும் ‘குதிரை பேர' அரசின் அமைச்சர்கள், பொது விநியோகத் திட்டம் பற்றி துளியும் கவலைப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த துறையின் அமைச்சர் காமராஜ், தன் மீதுள்ள மோசடி வழக்குகளில் இருந்து தப்பிக்கவே நேரமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
ஆட்சி நீடித்தால் அவலம் தொடரும்
ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைக்கிறதா என்பதை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஆய்வு செய்து, ஒரு ‘அரசியல் நாடகத்தை' அரங்கேற்றிய உணவு அமைச்சர், சில தினங்களில் அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் அடிப்படை தேவையான சர்க்கரையின் விலையை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. மக்களின் நலன் பற்றி கவலைப்படாமல் அரசு பணத்தில் ‘விழா கொண்டாட்டம்' மற்றும் ‘கமிஷன் கொண்டாட்டம்' போன்றவற்றில் ஈடுபட்டு, கட்-அவுட் கலாச்சாரத்திற்காக உயர்நீதிமன்றத்திடமே குட்டு வாங்கியிருக்கும் ‘குதிரை பேர' முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ‘அதிர்ச்சிப் பரிசு' அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான சர்க்கரையின் அராஜக விலை யேற்றம். பதவியில் நீடித்தால் போதும், மான்யங்கள் போனால் நமக்கென்ன என்ற தீய எண்ணத் துடன் செயல்படும் இந்த முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அமைச்சர் களும் பதவியில் நீடிக்கும் வரை, தமிழக மக்களுக்கு தாங்கமுடியாத துயரங்கள் அணிவகுத்துக் கொண்டேதான் இருக்கும்.
ஏழைகளுக்கு தொடர்பு இல்லை
மாநிலத்தில் உள்ள மதிகெட்ட ‘குதிரை பேர' அரசை துச்சமென மதிக்கும் மத்திய அரசு, மருத்துவமனையில் அம்மையார் ஜெயலலிதா இருக்கும்போதே, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ‘கையை முறுக்கி கையெழுத்து பெற்றுக் கொண்டு' இன்றைக்கு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலைப்படாமல், ‘அரிசி மான்யம் ரத்து', ‘சர்க்கரை மான்யம் ரத்து', ‘ஆதார் கார்டு இணைப்பு', ‘ரேசன் கார்டுகள் கொடுப்பதில் கடும் நிபந்தனைகள்' என்று ஒட்டுமொத்த பொது விநியோகத்திட்டத்தையே சிதைத்து வருகிறது. ஏழை களுக்கும் இப்போதுள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மத்திய பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் உணர்த்தி வருகிறது.
பொதுவிநியோக திட்டமே ரத்து?
அப்படியொரு நடவடிக்கைதான் இப்போதைய சர்க்கரை விலை ஏற்றம். ஏற்றுக்கொள்ள இயலாத கெடுபிடிகளை, நிபந்தனைகளை விதித்து, பொது விநியோகத் திட்டத்தையே ஒருநேரத்தில் ரத்து செய்து விடுவார்களோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் உச்சநீதிமன்றமே பாராட்டும் வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட பொது விநியோகத் திட்டம், இன்றைக்கு ‘குதிரை பேர' அதிமுக ஆட்சியில் சீர்குலைந்து நிற்கிறது. ‘பருப்பு டெண்டர் ஊழல்', ‘ஸ்மார்ட் கார்டு டெண்டர் ஊழல்' என்று சிரிப்பாய் சிரிக்கும் இந்த அரசின் நிர்வாக அலங்கோலம் இன்னும் எத்தனை மாநில உரிமைகளையும், நலன்களையும், நிதி ஆதாரத்தையும், கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்களையும் காவு கொடுக்கப் போகிறதோ என்ற வேதனை தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறது.
விலை உயர்வை கைவிட வேண்டும்
ஆகவே, உறுதியளித்தபடி ‘குதிரை பேர' அரசு ரேசன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 பைசாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில், ஏழைகள் - நடுத்தர மக்கள் போன்றோரின் வயிற்றில் அடிக்கும் விதத்தில் இதுபோன்று சர்க்கரை மான்யத்தை ரத்து செய்வதை கைவிட்டு, தமிழக அரசுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து சிறப்பு நேர்வாக விலக்கு அளித்து, சர்க்கரை மான்யத்தை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.