நாங்கள் கேட்காவிட்டால் மக்கள் காரி துப்புவார்கள்- ஸ்டாலின், துரைமுருகன் கொந்தளிப்பு
சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் பற்றிய ஆதாரம் கொடுத்தும் சபாநாயகர் பேச அனுமதிக்க மறுக்கிறார். நாங்களும் இதுபற்றி சட்டசபையில் பேசாவிட்டால் மக்கள் எங்கள் மீது காறி துப்புவார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் சட்டசபையில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.
முதல்நாளில் எம்.எல்.ஏ சரவணன் வீடியோ விவகாரத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதிக்க மறுத்துவிட்டார். பின்னர் எதிர்க்கட்சிகளை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
திமுக வெளிநடப்பு
இரண்டாம் நாளான நேற்று நேரமில்லா நேரத்தில் இதே விவகாரத்தை பேச ஸ்டாலின் முயற்சி செய்தார். ஆனால் ஆதாரம் இல்லாமல் பேச அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் கூறவே திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு பலகோடி ரூபாய் கைமாறி இருக்கிறது. இது பற்றி அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் கொடுத்த பேட்டி கடந்த சில தினங்களாகவே ஆங்கில தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது என்றார்.
தலைகுனிவு
இந்த பிரச்சனை குறித்து நாங்கள் பேச அனுமதி கேட்டால், அந்த பிரச்சனை கோர்ட்டில் இருக்கிறது. எனவே பேச அனுமதி தரமாட்டேன் என்று சபாநாயகர் கூறுகிறார். இந்த பண விவகாரம் தமிழக அரசியலில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. முதல்நாளில் இந்த பிரச்சனையை கிளப்பியதற்காக எங்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள்.
எம்எல்ஏக்ள்ள மறுக்கவில்லை
எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்டோம். எங்களை கைது செய்து மாலை வரை ஒரு மண்டபத்தில் வைத்து விட்டார்கள். சட்டமன்ற விதிப்படி நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கு பற்றிதான் கருத்து கூறக் கூடாது. ஆனால் இந்த வழக்கே இன்னும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் சபாநாயகர் அது பற்றி பேச அனுமதி தர மறுக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பான எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை அதை சட்டசபையில் மறுக்கவில்லை.
ராஜினாமா செய்ய வேண்டும்
இந்த தலைகுனிவான சம்பவத்துக்கு பொறுப்பேற்று இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும். இந்த பிரச்சனையை பேச அனுமதித்தால் அந்த எம்.எல்.ஏ.க்கள் பதில் சொல்ல வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் மறுப்பு தெரிவித்தால் கூட அதை சபையில் பதிவு செய்யலாம். ஆனால் சபாநாயகர் அது பற்றி விவாதிக்கவே அனுமதி தர மறுக்கிறார்.
மக்கள் காறி துப்புவார்கள்
எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்களுக்கு தலை குனிவு ஏற்படுத்திய பிரச்சனை இது. எனவே மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் நாங்கள் இது பற்றி சட்டசபையில் கேட்காவிட்டால் மக்கள் எங்கள் மீது காரி உமிழ்வார்கள்.
3வது நாளக பேச முயற்சி
எனவே இந்த பிரச்சனை குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று சொல்கிறோம். தொடர்ந்து இந்த பிரச்சனையை சபையில் எழுப்புவோம் என்று கூறினார் ஸ்டாலின். இன்றும் இதே பிரச்சினையை பேச சபாநாயகர் அனுமதி மறுக்கவே திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆதாரம் அளித்தோம்
நேற்று சபாநாயகர் ஆதாரம் கேட்டார். இன்று அதற்கான ஆதாரத்தை கொண்டு வந்தோம். அதிமுக எம்.எல்.ஏக்கள் பணப்பேரம் குறித்த ஆதாரத்தை அளித்தும் விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுப்பு மறுத்துவிட்டார் என்றார்.
ஆதாரத்தை ஏற்க மறுப்பு
அவையிலோ அல்லது அறையிலோ பணபேரம் குறித்த சி.டி.யை சபாநாயகரிடம் வழங்க தயாராக இருதோம். ஆதாரத்தை நீங்கள் பார்த்த பின் நாளை விவாதம் நடத்தலாம் என சபாநாயகரிடம் கூறினோம் ஆனால் கோரிக்கையை சபாநாயகர் மறுத்துவிட்டார்.
அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
நாங்கள் பேசியதை எல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார். சபை குறிப்பில் இடம் பெறாது என்று தீர்ப்பளித்ததாக கூறினார். இதற்கு மேல் அவரிடம் இருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? எனவே வெளி நடப்பு செய்தோம் என்றார்.
மாற்றி பேசுவதா?
ஸ்டாலினை தொடர்ந்து பேசிய துரைமுருகன், சபாநாயகர் ஆதாரம் கேட்டார், நாங்கள் கொடுத்தோம். ஆனார் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதைக் கேட்டு இன்று சபாநாயகர் மாற்றி பேசுகிறார் என்று துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
தினசரி புயல்
எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் பற்றியே எதிர்கட்சிகள் கவனம் செலுத்துவதால் முக்கிய பிரச்சினைகள் பின்தள்ளப்படுகின்றன. எனவே வலுவான எதிர்கட்சியான திமுக மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து சட்டசபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.