ஜெ. கொடுத்த அகல் விளக்கை இப்படி சாம்பலாக்கிட்டீங்களே.. ஸ்டாலின் கிண்டல்
ஜெயலலிதா கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படும் அகல் விளக்கை அனைவரும் சேர்ந்து அணைத்து சாம்பலாக்கிவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார்.
சென்னை: ஜெயலலிதா கொடுத்துவிட்டு சென்றதாக கூறும் அகல்விளக்கை அனைவரும் சேர்ந்து அணைத்து சாம்பலாக்கிவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் டி.ஜெயகுமார் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி பேசினார். அப்போது அவர், இந்த ஆட்சியை ஒரு அகல் விளக்கு போல் எங்களுக்கு ஜெயலலிதா அளித்திருக்கிறார் என்று கூறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:
பூஜியத்தை ராஜியமாகும் பட்ஜெட் இது. ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட தொலைநோக்கு 2023 திட்டம், 110 விதி ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கவில்லை. மின்திட்டங்கள் ஏதும் இல்லை. வேலை வாய்ப்புகள் உருவாக்குவதற்கான வழிகள் இல்லை.
தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து ரூ. 3 லட்சம் கோடியை தாண்டி செல்கிறது. மாநிலத்தின் மொத்த வருவாயை விட கடனுக்கான வட்டி அதிகமாக உள்ளது. இதனால், மிகப் பெரிய கடனாளி என்ற சாதனையை தமிழகம் படைத்துள்ளது.
இத்தகைய திறமையற்ற நிர்வாகத்தால் ஜெயலலிதா தங்களிடம் கொடுத்து சென்றதாக கூறும் அகல் விளக்கை அனைவரும் சேர்ந்து அணைத்து சாம்பலாக்கிவிட்டனர் என்றார் அவர்.