காவிரி உரிமை மீட்பு.. நாளை மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார் ஸ்டாலின்
திமுக சார்பில் நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக சார்பில் நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் ஏப்ரல் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காவிரி உரிமை மீட்பு பயணமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் திடீரென வள்ளுவர் கோட்டத்துக்கு சென்று ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் திமுக இன்று 4-ஆவது நாளாக காவிரி வாரியத்துக்காக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், திமுக சார்பில் நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
இதில் காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.