பிறந்த நாள் விழாவில் ஸ்பீக்கர் வைக்காதீர்.. திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
பிறந்தநாள் கொண்டாட்டங்களில் திமுக நிர்வாகிகள் ஸ்பீக்கர் போன்றவற்றை பயன்படுத்தி மாணவர்கள் படிப்பதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தமது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் திமுக நிர்வாகிகள் ஸ்பீக்கர் போன்றவற்றை பயன்படுத்தி மாணவர்கள் படிப்பதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி :
நாளை முதல் (மார்ச் 2) ப்ளஸ் டூ தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் அடுத்த கட்ட கல்லூரி வாழ்க்கையை தொடங்குவதற்கு மிக முக்கியமான இந்த தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
இந்த நேரத்தில் மாநிலம் முழுவதும் என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து திமுகவினர் மக்கள் நலம் பயக்கும் உதவிகளைச் செய்து வருவது மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகிறது. அப்படி பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நடத்தும் கழக நிர்வாகிகள் நாளை துவங்கும் ப்ளஸ் டூ மாணவர்கள் தேர்வுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் லவுட் ஸ்பீக்கர் போன்றவற்றை பயன்படுத்தி மாணவ செல்வங்கள் படிப்பதற்கு தொந்தரவு செய்ய வேண்டாம்.
தங்களின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான தேர்வை மாணவர்கள் எழுதுகின்ற இந்த நேரத்தில் ஆடம்பரம், ஆரவாரம் இன்றி மிகவும் அமைதியான முறையில் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வு எழுத வழிவிடுமாறு கழக நிர்வாகிகளை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டலின் குறிப்பிட்டுள்ளார்.