பெரியார் மறைந்தும் விமர்சனம்... ரஜினிகாந்த் மீது மு.க. ஸ்டாலின் மறைமுக தாக்கு
சென்னை: தந்தை பெரியார் இறந்து இவ்வளவு காலம் ஆன பிறகும் அவரைப் பற்றி விமர்சனம் செய்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.
தந்தை பெரியாரின் 1971-ம் ஆண்டு சேலம் மாநாடு குறித்து நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க முடியாது என கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் மீது வழக்கு தொடருவதில் திராவிடர் விடுதலை கழகம் முனைப்புடன் உள்ளது. இவ்விவகாரத்தில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றதாக பெரியார் இயக்கத்தினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது, இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மணமக்களுக்கு அறிவுரை
தயாநிதி மாறன் பேசும் போது மணமக்களுக்கு அறிவுரை கூறினார். மணமகன் வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார். அவருடைய அனுபவத்தில் சொல்லியிருக்கிறார். அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பது என்னுடைய அனுபவம். அதேநேரத்தில் மணமகளையும் அமைதியாக இருக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
SUN னோட SON க்கே தடையா... மதுரையை கலக்கும் அழகிரி ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்
பெரியார் பெற்று தந்த உரிமை
மத்திய-மாநில அரசைப் போல அமைதியாக ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கக்கூடாது. கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்பது தான் நம்முடைய உரிமை. ஆண்-பெண் சமம். தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில், சீர்திருத்த மாநாட்டை நடத்தி எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்று, பெண்களுக்கான சம உரிமையைத் தந்தை பெரியார் அவர்கள் பெற்றுத் தந்தார்கள்.
பெரியாரை இன்றும் விமர்சிக்கிறார்கள்
அப்படிப்பட்ட தந்தை பெரியாரைப் பற்றி இப்போது விமர்சனம் செய்கின்ற சூழ்நிலை உள்ளது. பெரியார் இறந்து இவ்வளவு காலம் ஆன பிறகும் அவரைப் பற்றி விமர்சனம் செய்கிறார்கள் என்றால் அது தான் அவரது பெருமைக்குச் சான்று. மத்திய அரசு மதத்தின், ஜாதியின் பெயரால், மக்களைப் பிளவுபடுத்தும் கொடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டு வரும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
நாட்டில் வாழ முடியுமா?
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவற்றைக் கொண்டு வந்து நிறைவேற்றும் நிலை வந்திருக்கிறது. அதைத் தட்டிக் கேட்கிற நம்முடைய சுயமரியாதை, உரிமை பறிக்கப்படக் கூடிய நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் நிம்மதியாக நாட்டில் வாழ முடியுமா? இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.