அமைச்சர்கள் இதுவரை செய்யாதது எது தெரியுமா.. இன்னும் வீடு புகுந்து திருடுவதுதான்- ஸ்டாலின் பொளேர்
விழுப்புரம்: அமைச்சர்கள் இதுவரை செய்யாதது வீடு புகுந்து திருடுவது ஒன்றைதான் என்று மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் குட்கா வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்ததை அடுத்து அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் குற்றம்சாட்டினாலே குற்றவாளி அல்ல என்பதும் அதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வாதம் ஆகும்.
கருணாநிதி அல்ல
இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கருணாநிதி பிறந்தநாள் இனி செம்மொழி நாள் என திமுக கொண்டாடும். நான் கருணாநிதி அல்ல ; ஆனால் எனக்கும் கருணாநிதியைபோல் உழைக்கத் தெரியும்.
ஊழல்கள்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு பாசிச அரசு. அதை உடனடியாக வீட்டுக்கு அனுப்பும் பணியை நாம் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசோ நடந்தால் ஊழல், நின்றால் ஊழல், படுத்தால் ஊழல் என ஊழல்களால் திளைத்துக் கொண்டிருக்கிறது.
அமைச்சர்கள்
திமுக ஆட்சிக்கு வந்ததும் இன்று கரன்சி எண்ணி கொண்டிருப்பவர்கள், கம்பி எண்ணப் போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் இன்னும் செய்யாதது எது தெரியுமா?
தேர்தல் வந்தாலும்
வீடு புகுந்து திருடுவது ஒன்றுதான் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இடைத்தேர்தலோ நாடாளுமன்றத் தேர்தலோ எந்த தேர்தல் வந்தாலும் திமுகவே அதில் வெற்றி பெறும் என்றார் அவர்.