கமிஷனைத்தான் தூர் வாருகிறார்கள்.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
அணை உடைய காரணம் அதிமுக அரசுதான் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் உடைந்ததை தடுத்திருக்கலாம் என்று திமுக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக அரசில் கமிஷனை தூர்வாருகிறார்களே தவிர கால்வாய்களை தூர்வாரவில்லை என்றும் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.
திருச்சி முக்கொம்பு மேலணையில், வெள்ளத்தால் உடைந்த மதகுகள் அனைத்தைதயும் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
சாடிய ஸ்டாலின்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசினார். அப்போது மதகுகள் குறித்த விவகாரத்தில் அதிமுக அரசின் கருத்துக்கள், மெத்தனம் உள்ளிட்டவற்றை கடுமையாக சாடினார். செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசிய முழுவிவரம் இதோ:
அதிமுகவின் அலட்சியம்
முக்கொம்பு மதகு போல் தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. மதகுகளை முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் இப்படி உடைப்பு ஏற்பட்டதை தடுத்திருந்து இருக்கலாம். ஆனால் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசின் அலட்சியம்தான் இதற்கு காரணம். இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.
முதல்வரின் அபூர்வ கருத்து
40 சதவிகித பணிகள் தான் முடிந்துள்ளது. ஆய்வுக்கு வந்த போது காய்ச்சல் சொல்லிக் கொண்டு வருவது இல்லை என அபூர்வமான கருத்து ஒன்றை முதலமைச்சர் கூறினார். அவர் சொன்ன கருத்து,ரோம் நகரம் தீபிடித்து எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததை நினைவுபடுத்துகிறது. நீரோ மன்னனின் வாரிசு போல் முதல்வர் பேசி உள்ளார்.
மணல் கொள்ளையே
காய்ச்சல் சொல்லாமல் வருகிறது. ஆனால் கமிஷனைப் பொருத்தவரை செல்லிக் கொண்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு 47 நாட்கள் ஆகியும், இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராத நிலைதான் உள்ளது. கமிஷனை தூர்வாருகிறார்கள். ஆனால் கால்வாய்களை தூர்வாரவில்லை. தூர் வாரும் பணியில் 5 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. மணல் கொள்ளையால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கோமா நிலையில் ஆட்சி
கோமா நிலையில் தான் தமிழகத்தில் இன்றைய ஆட்சி இருக்கிறது. இது தொடர்பான விரைவில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆட்சியில் முறையான விசாரணை நடைபெறாது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
கொள்ளையில்தான் கவனம்
கொள்ளையடிப்பதில் தான் அதிமுக அரசு கவனமாக இருந்து வருகிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்எல்ஏ.,க்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மக்கள் நல திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீர் மேலாண்மை குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள தூர் வாரும் பணிளை குறித்து அறிக்கை கேட்டு இருக்கிறோம். ஆனால் முறையான தகவல் தரவில்லை. நாங்கள் பல தடவை சட்டமன்றத்தில் பேசியுள்ளோம்."
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
இந்த ஆய்வின் போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தரபாண்டியன், மாநகர மாவட்ட செயலாளர் மு. அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்