சுப்பிரமணியம், கனகராஜ் மர்ம மரணங்கள்... ஹைகோர்ட் நீதிபதி மேற்பார்வையில் விசாரணை தேவை... ஸ்டாலின்
நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியம், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்டோரின் மர்ம மரணங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு மு.
சென்னை: நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியம், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்டோரின் மர்ம மரணங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ஆம் தேதி அத்துமீறி நுழைய முயன்ற 11 பேரை அதன் காவலாளிகள் தடுத்தனர். அப்போது மர்ம கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் ஓம்பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார்.
மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸார் விசாரணை
இந்நிலையில் இந்த கொள்ளையின் போது தங்கம், முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸார் கருதினர். மேலும் இதுதொடர்பாக தனிப்படை போலீஸார் கேரளாவைச் சேர்ந்த 9 பேரை ஒவ்வொருவராக கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளிகள்
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான் ஆகியோர் கருதப்பட்டனர். இந்நிலையில் போலீஸார் அவர்களை தேடி வந்த வேளையில் சேலம் ஆத்தூர் அருகே நடந்த விபத்தில் சிக்கி ஜனகராஜ் உயிரிழந்தார். மேலும் சயானும் மற்றொரு விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரது மனைவி, மகள் ஆகியோர் விபத்தில் இறந்தனர்.
மர்ம மரணங்கள்
இதனிடையே சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரித்துறை நடத்தப்பட்ட போது சோதனைக்குள்பட்ட நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியம் நேற்று மர்மமான முறையில் அவரது தோட்டத்தில் இறந்து கிடந்தார். சுப்பிரமணியன், விஜயபாஸ்கரின் நண்பர் என்றும் அரசு ஒப்பந்தங்களை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் கோரிக்கை
கொடநாடு எஸ்டேட் கொலை- கொள்ளை வழக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு ஆகியவை விசாரணையில் உள்ள நிலையில் கனகராஜும், சுப்பிரமணியனும் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். ஆகையால் இந்த மர்ம மரணங்கள் குறித்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.