மூத்த கம்யூ. தலைவர் தா.பாண்டியனை நேரில் சந்தித்தார் ஸ்டாலின்.. நலம் விசாரித்தார்
தா.பாண்டியனை மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
Recommended Video
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியனுக்கு 85 வயதாகிறது. சமீப காலமாக சிறுநீரக பிரச்சினைக்காக இவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற தா.பாண்டியன். ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இயற்கை கருணாநிதியை அழைத்து செல்ல போராடுகிறது.. கருணாநிதி உயிருக்காக போராடவில்லை"என்றவர், அவர் நீடுடி வாழ்வார்" எனவும் வாழ்த்தினார்.
இந்நிலையில், நேற்று காலை தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தா.பாண்டியனுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இதையடுத்து பிற்பகலில் அவரது உடல்நலம் ஓரளவு தேறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் அவரது கட்சி நிர்வாகிகள் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு மருத்துவமனைக்குச் சென்று தா.பாண்டியனை நேரில் சந்தித்தார். அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். ஸ்டாலினுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்களான பொன்முடி, சேகர்பாபு ஆகியோரும் சென்றிருந்தனர்.