சட்டசபை உரிமைக் குழு நோட்டீஸை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு
சட்டசபை உரிமைக் குழு நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது.
சென்னை : சட்டசபை உரிமைக் குழு திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு நோட்டீஸ் வழங்கியதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக உறுப்பினர்கள் மானிய கோரிக்கையின் போது சட்டசபைக்கு கொண்டு சென்றனர்.
தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, ஸ்டாலின் உட்பட 20 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமைமீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.
அதன்படி உரிமை குழு கூட்டம் கூடியத. அதில் திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரிமைக்குழுவிடம் விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் கோரியுள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸ் எதிர்த்து மு.க. ஸ்டாலின் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடைகளில் போலீஸ் உதவியோடு விற்பனை செய்கிறார்கள்.
இதை நிரூபித்த திமுக உறுப்பினர்களை உரிமை குழு நோட்டீஸ் என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.