அன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்ற ஸ்டாலின்
அன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து ஸ்டாலின் ஆசி பெற்றார்.
சென்னை: அன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்து ஆசியும் பெற்றார்.
இன்று அன்னையர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கருவில் சுமந்து பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறையும் தியாகச் சுடரான அன்னையரை போற்றி பிரபலங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள தயாளு அம்மாளை சந்தித்து அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறுகையில் கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, பின் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டிப் பாராட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய உயர்ந்த கோயிலாம் அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில், அன்னையர் தினத்தில் பாசம் மிகுந்த வாழ்த்துகளைப் பெற்றுப் பெரிதும் மகிழ்ந்தேன்.
தாய், தாய்மொழி, தாய்நாடு அனைத்தும் நமை ஈன்ற அன்னையரே! இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி ஏற்றிப் போற்றி மதித்திடுவோம்; காத்திடுவோம்.
அன்னையர் அனைவருக்கும் தாள்பணிந்த வணக்கத்தையும் வாய்மணக்கும் வாழ்த்துகளையும் உரித்தாக்கி உள்ளத்தால் கொண்டாடுகிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.