தென்மண்டல திமுகவில் களை எடுப்புக்கு தயாராகிவிட்ட ஸ்டாலின்!
அடுத்தது தென்மண்டலத்தில் உள்ள 18 மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆய்வு நடத்துகிறார்.
Recommended Video
சென்னை : தென்மாவட்டத்தைச் சேர்ந்த 18 மா.செக்களுடன் இன்று விவாதிக்க இருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். ' மேற்கு மாவட்டங்களில் புதிதாகப் பதவி பெற்றவர்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
மீண்டும் அதேபோன்ற புகார்கள் வரக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஆய்வு நடக்கிறது' என்கின்றனர் உ.பிக்கள் வட்டாரத்தில்.
தி.மு.கவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, கட்சித் தொண்டர்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் தனியாக அமர்ந்து ஆய்வு நடத்தினார் ஸ்டாலின்.
இந்த ஆய்வின்போது பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட்டன. இந்தப் புகார்களின் உண்மைத்தன்மையை விசாரிக்க வழக்கறிஞர்கள் கொண்ட டீம் ஒன்றையும் அமைத்தார்.
இந்தக் குழுவினர் மாவட்டங்களுக்குச் சென்று விரிவாக ஆராய்ந்தனர். அதன் முடிவுகளையும் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதன் எதிரொலியாக, சில வாரங்களுக்கு முன்பு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். தலைமையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள், அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். அப்போது, 'எங்களை நீக்கியது குறித்துகூட எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், புதிதாக அமர்த்தப்பட்ட நிர்வாகிகளைப் பற்றி விசாரிக்காமல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டீர்கள். அவர்களில் பலர் கட்சிப் பதவிக்குத் தகுதியற்றவர்கள். தெருவில் போகிற வருகிறவர்களையெல்லாம் உங்களிடம் பரிந்துரை செய்துவிட்டார்கள்' என ஆதங்கப்பட்டுள்ளனர்.
'இதுபோன்ற சூழல் இனி வந்துவிடக் கூடாது' என்பதற்காகத்தான் அறிவாலயத்தில் இன்று மா.செக்கள் சந்திப்பை நடத்த இருக்கிறார் ஸ்டாலின். இதுகுறித்து பேசிய தி.மு.க பிரமுகர் ஒருவர், மேற்கு மாவட்டங்களை அடுத்து தென்மண்டலத்தில் களையெடுப்பை நடத்த இருக்கிறார் ஸ்டாலின். 18 மாவட்டங்களின் செயலாளர்கள் இன்று சென்னை வந்துள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து, உங்கள் பகுதியில் நடவடிக்கைக்கு ஆளாகப் போகும் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர் யார் என்ற பட்டியலைக் கொடுக்க இருக்கிறார். அவர்களிடமே தகுதியான நபர்களைக் குறிப்பிடுமாறு அறிவுறுத்த இருக்கிறார்.
அப்படி யாரையும் மா.செக்கள் குறிப்பிடவில்லையென்றால், தலைமையே அந்தந்த நகர, ஒன்றியங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும். மேலும், அறிவாலயத்தில் நடந்த களஆய்வின்போது வந்த புகார்களையும் அதன்பேரில் விசாரணைக் குழு அளித்த அறிக்கை குறித்தும் விவாதிக்க இருக்கிறார்.
இன்னும் சில நாட்களில் தென்மண்டலத்தை அதிர வைக்கும் அளவுக்கு நிர்வாகிகள் மாற்றம் இருக்கும்" என்றார்.