குட்காவை கொண்டு வருவது அவை மீறல்னா... குற்றவாளி ஜெ படத்தை மட்டும் திறக்கலாமா?.. ஸ்டாலின் கேள்வி
குட்காவை சட்டசபைக்கு உள்ளே கொண்டு வருவது விதிமீறல் என்கிறபோது குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை மட்டும் திறக்கலாமா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: குட்காவை சட்டசபைக்கு உள்ளே கொண்டு வருவது விதிமீறல் என்கிறபோது குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை மட்டும் திறக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று திமு செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் படத்தை நாளை சட்டசபையில் திறந்து வைக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக திமுக நீதிமன்றத்தை நாளை நாட உள்ளது.
தடைசெய்யப்பட்ட “குட்கா” போதைபொருளின் தாராள விற்பனையை பகிரங்கப்படுத்த சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்தது, “அவை மீறல்” என்றவர்கள், அரசியல் சட்டத்துக்கும்-உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்திற்கு உள்ளேயே திறந்துவைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
— M.K.Stalin (@mkstalin) February 11, 2018
இந்நிலையில் ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் திமுக பங்கேற்காது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். அவர் டுவிட்டரில் கூறுகையில், தடைசெய்யப்பட்ட "குட்கா" போதைபொருளின் தாராள விற்பனையை பகிரங்கப்படுத்த சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்தது, "அவை மீறல்" என்றவர்கள், அரசியல் சட்டத்துக்கும்-உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்திற்கு உள்ளேயே திறந்துவைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு குட்கா விற்பனை நடந்து வருகிறது என்பதை தமிழக ஆட்சியாளர்களுக்கு காண்பிக்க ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்எல்ஏக்கள் குட்கா பொருளை சட்டசபையில் கொண்டு வந்து காண்பித்தனர். தடை செய்யப்பட்ட பொருளை அவைக்கு கொண்டு வருவது அவை மீறல் என்று கூறி அவர்களுக்கு சபாநாயகர் தனபால் தகுதிநீக்க நோட்டீஸ் அளித்தது குறிப்பிடத்தக்கது.