போக்குவரத்து கழக சீரமைப்பு- முதல்வர் எடப்பாடியிடம் அறிக்கை வழங்கினார் ஸ்டாலின்
அரசு போக்குவரத்துக் கழகத்தை சீரமைப்பது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை முதல்வர் எடப்பாடியிடம் இன்று ஸ்டாலின் வழங்கினார்.
Recommended Video
சென்னை: பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் போக்குவரத்து கழகங்களை சீரமைப்பது குறித்துமான அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வழங்கினார்.
தமிழகத்தில் அண்மையில் பேருந்து கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிராக அனைத்து தரப்பும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
திமுக அனைத்துக் கட்சிக் கூட்டங்களை கூட்டி போராட்டங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகத்தை சீரமைப்பது தொடர்பாக குழு ஒன்றையும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் திமுக அமைத்திருந்தது.
இக்குழு தமது அறிக்கையை மு.க.ஸ்டாலினிடம் அளித்திருந்தது. இந்த அறிக்கையை இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வழங்கினார் ஸ்டாலின்.
இச்சந்திப்பின் போது பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.