மு.க.ஸ்டாலின் கடத்தியதாக நீண்டகாலமாக சுற்றும் வதந்தி.. மவுனம் கலைத்தார் பாத்திமா பாபு!
பாத்திமா பாபுவை மு.க.ஸ்டாலின் கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்தி றெக்கை கட்டி பறந்து வருகிறது. பாத்திமா பாபு சில தினங்களுக்கு முன்பு அதற்கு பதில் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திமுகவின் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், பல வருடங்கள் முன்பாக, தன்னை கடத்தியதாக உலவும் வதந்திகள் உண்மையில்லாதவை என தெரிவித்துள்ளார் செய்திவாசிப்பாளராக இருந்து நடிகையாகியுள்ள பாத்திமா பாபு.
தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வரும் முன்பாக தூர்தர்ஷன் செய்திகள் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த செய்தி வாசிப்பாளர்களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் பாத்திமா பாபு.
மிகுந்த அழகு என பாத்திமா பாபுவை பார்த்த வாசகர்கள், தூர்தர்ஷனுக்கு நேயர் கடிதம் எழுதி அனுப்புவது வாடிக்கை. அப்படிப்பட்ட பாத்திமா பாபு குறித்து பல வருடங்களாக ஒரு வதந்தி சுற்றி வருகிறது.
பதில் சொல்லாத பாத்திமா பாபு
பாத்திமா பாபுவை மு.க.ஸ்டாலின் கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்தி றெக்கை கட்டி பறந்து வருகிறது. இப்போதும் கூட பிற கட்சிகளை சேர்ந்த நெட்டிசன்கள், ஸ்டாலின் குறித்து இந்த விமர்சனத்தை சமூக வலைத்தளங்களில் முன் வைத்து வருவதை பலரும் பார்த்திருப்பீர்கள். அந்த வதந்திகளுக்கு இதுவரையிலும் பதில் சொல்லாமல் இருந்த பாத்திமா பாபு சில தினங்களுக்கு முன்பு அதற்கு பதில் அளித்துள்ளார்.
ஊடகத்தில் வெளியிடவில்லை
பாத்திமா பாபு கூறியதாவது: என் வாழ்வில் அதுபோன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் நான் அதிர்ச்சியடைந்து, இது குறித்து நான் பிரபல வார இதழ் நிருபர் ஒருவரிடம் விளக்கம் கொடுத்தேன். ஆனால், ஏனோ தெரியவில்லை, நான் சொன்ன விளக்கம் எந்த மீடியாவிலும் வெளியாகவில்லை.
செய்தி வாசிக்கவில்லை
தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது, 'சித்திரப்பாவை' எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் நடைமுறைப்படி, தொடரில் நடித்து முடிக்கும் வரை செய்தி வாசிக்க முடியாது. இதனால், நான் அந்த காலகட்டத்தில் செய்தி வாசிக்கவில்லை. சித்திரப்பாவை தொடர் மொத்தம் 13 வாரங்களில் முடிந்ததும் நான் மீண்டும் செய்தி வாசிக்க ஆரம்பித்தேன்.
தப்பு சொல்ல வேண்டாம்
இந்த காலகட்டத்தில் என்னை செய்தி வாசிப்பாளராக தினமும் பார்க்க முடியவில்லை என்பதால், யாரோ இதுபோன்ற வதந்தியை கிளப்பிவிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். இதை சொல்லியே ஒரு கட்சியின் செயல்தலைவராக உள்ளவரின் குணநலனை அசிங்கப்படுத்துவது ஏற்புடையது இல்லை. நான் விளக்கம் அளித்த பிறகும், அதே வதந்தியை உண்மை போலக் கூறி ஸ்டாலின் நற்பெயருக்குக் களங்க விளைவிப்பார்கள் என்றால் அதை நான் ஒன்றும் சொல்ல முடியாது.
அதிமுகவில் பாத்திமா பாபு
திருமணத்திற்கு முன்பும், பிறகும், எனது கணவர் பாபுதான், டிவி சேனல் அலுவலகத்திற்கு கொண்டு வந்துவிட்டுவிட்டு, மீண்டும் அழைத்து செல்வது வழக்கமாக இருந்தது. அப்படியும், ஏன் புரளி கிளப்பப்பட்டது என்பதுதான் புரியவில்லை. என்னைப் பற்றி நான் சொல்வது தான் உண்மை. இதை பற்றி இனிமேல் விளக்கம் தெரிவிக்கப்போவதில்லை என்றார் பாத்திமா பாபு. இவர் அதிமுகவில் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், அக்கட்சியை விட்டு சற்று விலக ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.