"சுப்பிரமணியபுரம்" கல்வீச்சுக்கு காரணம் ஆர்வம் மிகுதிதான்..பெரிதுபடுத்த வேண்டாம்: மு.க. ஸ்டாலின்
மதுரை: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது மதுரையில் தமது வாகனம் மீது கல்வீசப்பட்டதற்கு தொண்டர் ஒருவரின் ஆர்வம் மிகுதிதான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அழகிரி ஆதரவாளர் ஒருவர் அங்கு தகராறில் ஈடுபட்டார். அத்துடன் மு.க.ஸ்டாலின் வாகனம் மீதும் கல்வீசித் தாக்கினார்.
ஆனால் திமுகவினர் அவர் மீது புகார் ஏதும் கொடுக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை மதுரையில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
இன்று காலை தேனியிலும், மாலை திண்டுக்கல்லிலும் பிரசாரம் செய்கிறேன். நாளை திருச்சியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறேன்.
தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பாரதிய தலைமையிலான கூட்டணி மதவெறி கூட்டணி. பதவி வெறிக்காகவும், மத வெறிக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
மதுரையில் நடந்த கல்வீச்சு சம்பவத்திற்கு ஆர்வ மிகுதியே காரணம். தங்கள் பகுதிக்கு பிரசாரத்திற்கு வரவில்லை, அதிக நேரம் பேசவில்லை என்ற காரணத்திற்காக தொண்டர்கள் கல்வீசுவதும், வேனை கம்பால் அடிப்பதும் வழக்கம் தான். அதை பெரிதுபடுத்த தேவையில்லை,
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.