எங்களுக்கு விஜயகாந்த் முக்கியமே அல்ல... அதிமுக ஓட்டைத்தான் பிரிப்பார்... சொல்வது மு.க.ஸ்டாலின்
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிமுக வாக்குகளைத்தான் பிரிக்கும்; ஆகையால் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை முக்கியமான சக்தியாக திமுக கருதவில்லை என அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு என்.டி.டி.வியின் பிரண்ணாய் ராய் குழுவுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி விவரம்:
தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் நானே மக்களிடம் நேரடியாக சொல்லி வருகிறேன். நிதி சார்பாகவோ, அரசு அங்கீகாரம் தொடர்பாகவோ எங்கள் ஆட்களே சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால், மீண்டும் ஆட்சி அமைந்தால் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாது என்பதை நிச்சயமாக உறுதியளிக்கிறேன். அதற்காகத் தான் திமுக தேர்தல் அறிக்கையிலேயே லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறோம்.
வளர்ச்சி முக்கியம்
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மக்களிடம் முன்வைக்கும் முக்கிய வாக்குறுதி வளர்ச்சி. தமிழக இளைஞர்கள் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட விரும்புகின்றனர். வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இளைஞர்களின் இந்த இரண்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம் நோக்கம்.
கரப்ஷன், கமிஷன், கலெக்ஷனுக்கு தடை
தமிழகத்தின் வளர்ச்சிக்கு கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் இல்லாத அரசாங்கத்தை நடத்துவோம். வெளிநாட்டு முதலீடு ஊக்குவிக்க சிங்கிள் விண்டோ சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும். தொழில் தொடங்க அனுமதி கோரிய 100 நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். அதேபோல் தொழில் தொடங்க விரும்பும் உள்ளூர் வாசிகளுக்கும் சலுகைத் திட்டங்கள் வைத்திருக்கிறோம்.
மத்திய அரசுடன் சுமூக உறவு
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் மத்திய அரசுடனான உறவில் ஒரு பிரச்சினையும் இருக்காது. மத்திய அரசுடன் இசைந்து போவாம். பிரதமர் மோடியுடனான உறவில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
காங்கிரஸ் உறவு...
காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணியில்தான் இருந்தோம். இடையில், இலங்கைப் பிரச்சினையால் சிறிய பிரிவு ஏற்பட்டது.
குடும்ப சர்ச்சைகள்
எங்கள் குடும்ப சர்ச்சைகள் எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட பரப்புரை. அவ்வளவுதான். திமுகவை பொருத்தவரை விஜயகாந்த முக்கியமானவர் அல்ல. அவரால் அதிமுக ஓட்டுகள்தான் பிரியும்.
திமுக தலைவர் கருணாநிதி 93 வயதானாலும் 39 வயது இளைஞர் போல் சிறப்பாக பணியாற்றி வருகிறார்...அதனால் கட்சியில் மாற்றம் எதுவும் இல்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.