அடடே.... ஆச்சரியம்.... பாஜகவின் சு.சுவாமிக்கு மு.க.ஸ்டாலின் 'திடீர்' புகழாரம்
மதுரை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்குக் காரணகர்த்தாவான பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திடீரென புகழாரம் சூட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனதா கட்சியில் இருந்தாலும் பாஜகவில் இருந்தாலும் சுப்பிரமணியன் சுவாமிக்கு திமுக என்றாலே எட்டிக்காய் கசப்புதான்... திமுகவும் 1991-ஆம் ஆண்டு ஆட்சி கலைப்பின் சூத்ரதாரி என்பதாலும் ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் குடைச்சல் கொடுப்பவர் என்பதாலும் எப்போதும் அவர் மீது காட்டமாகத்தான் இருக்கும்.
குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை ஆகியவற்றில் சுப்பிரமணியன் சுவாமியின் நடவடிக்கைகளை அவர் சார்ந்த பாஜக உட்பட அனைத்து தமிழக கட்சிகளுமே வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது சட்டசபை தேர்தல் நேரம் நெருங்கிவிட்ட நிலையில் சுப்பிரமணியன் சுவாமியை திடீரென மு.க.ஸ்டாலின் புகழ்ந்து தள்ளியிருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
https://t.co/Knzb7Th1Pj Stalin -TN variety--praises Dr @Swamy39 -surprises many :)
— RVAIDYA (@rvaidya2000) January 25, 2016
மதுரையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர்கள் மாநாட்டில் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் காரணகர்த்தாவே சுப்பிரமணியசுவாமிதான்... அவர் மேற்கொண்ட முயற்சியால்தான் ஜெயலலிதாவுக்கு தண்டனையும் கிடைத்தது. இருந்தபோதும் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கும் போய் முறையிட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி என்று சுட்டிக்காட்டினார் ஸ்டாலின். அத்துடன் சுப்பிரமணியன் சுவாமியின் அரசியலோடு தமக்கு உடன்பாடு இல்லாதபோதும் இந்த வழக்கு தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளை சுட்டிக்காட்டி பாராட்டினார் ஸ்டாலின்.
திமுகவைப் பொறுத்தவரையில் முதல் முறையாக இப்படி சுப்பிரமணியன் சுவாமியை அக்கட்சியின் மூத்த தலைவரான ஸ்டாலின் புகழ்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாமே அரசியல்தான்!