மாநில சுயாட்சி, மொழி உரிமைக்காக திமுக போராடும்... அண்ணா நினைவு நாளில் மு. க.ஸ்டாலின் உறுதி
மாநில சுயாட்சி, மொழி உரிமைக்காக திமுக எப்போதும் போராடும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை : மாநில சுயாட்சி, மொழி உரிமைக்காகவும் திமுக போராடும் என்று அண்ணாவின் 49-ஆவது நினைவுநாளில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அண்ணாதுரையின் நினைவு நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 49வது நினைவு நாளில் அவர் துயிலுமிடும் நோக்கி ஆயிரக்கணக்கில் கழகத்தினர் அமைதிப் பேரணி நடத்தி, அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். 49ஆண்டுகளாக ஓர் இயக்கம் தனது நிறுவனத் தலைவருக்கு மவுனப் பேரணி நடத்தி அஞ்சலி செலுத்துவது என்பது அவர் வகுத்த கொள்கைகளின் வலிமையை உணர்த்துவதற்கும், அதனை ஏற்று செயல்பட வேண்டும் என்ற உறுதியினை மேற்கொள்வதற்காகவும்தான். அதனடிப்படையில் இன்று கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் உள்ளிட்ட கழக முன்னோடிகளுடன் பேரறிஞருக்கு அஞ்சலி செலுத்தினேன்.
பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சி கொள்கை-மொழி உரிமை ஆகியவை இன்று பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள நிலையில், தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த ஜனநாயகப் பாதையில் அதற்கானப் போராட்டத்தை தி.மு.கழகம் தொடர்ந்து முன்னெடுக்கும்.
தமிழக நலனை முன்வைத்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் அன்று அண்ணா முழங்கிய கருத்துகள் இன்று இந்திய ஒன்றியத்தில் உள்ள பல மாநிலங்களிலும் எதிரொலிப்பதிலிருந்தே அந்த சிந்தனை எத்தனை தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்திருக்கிறது என்பது விளங்கும். அவர் முன்வைத்த கொள்கைகளை வென்றெடுக்க அவரது நினைவுநாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.