குடும்பத்தோடு போய் கேட்டும், மு.க.ஸ்டாலினின் 'முக்கிய' கோரிக்கையை ஏற்காத முதல்வர்
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் சந்தித்து பேசியது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது பெரும் சவாலாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை நேற்று இரவு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து திடீரென முதல்வரை சந்திக்க மு.க. ஸ்டாலின், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார்.
அவருடன் குடும்ப உறுப்பினர்கள் கனிமொழி உள்ளிட்டோர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் டி.ஆர்பாலு உள்ளிட்டோரும் சென்றனர்.
மு.க.ஸ்டாலின் முன்வைத்து ஒரு முக்கியமான கோரிக்கையை முதல்வர் இதுவரை ஒப்புக் கொள்ளாதது தான் குடும்பத்தினருடன் அவரை நேரில் சென்று சந்திக்க காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது தனது கோரிக்கையை ஸ்டாலினும் அவரது குடும்பத்தாரும் மீண்டும் முதல்வரிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் தனக்கு ஏன் இந்த விஷயத்தில் ஆட்சேபனை உள்ளது என்பதை முதல்வர் எடுத்து கூறியதாக தெரிகிறது.
எனவே, ஸ்டாலின் கோரிக்கையை ஏற்பதாக முதல்வர் அப்போது உறுதியாக கூறவில்லையாம். அதிகாரிகளுடன் கலந்து பேசி விட்டு நான் பதில் தருகிறேன் என்று கூறி அனுப்பி விட்டதாக தெரிகிறது. இதனால் எந்த முடிவும் தெரியாமலேயே ஸ்டாலின் மற்றும் குடும்பத்தார் வெளியே வந்தனர்.
இதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சந்தித்த முதல்வர், ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல்வர் தனது முடிவை ஸ்டாலினுக்கு தொலைபேசியில் தெரிவிக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக, தலைமைச் செயலாளரை ஸ்டாலின் சந்தித்து தனது கோரிக்கையை அவரிடமும் தெரிவித்தார். இவ்வாறு ஸ்டாலின் ஒரு முக்கியமான கோரிக்கைக்கு அவர் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.