21 சட்டசபைத் தொகுதிகளில் திமுக வென்றால் தான் ஸ்டாலின் 'சிஎம்'... இல்லாவிட்டால் எடப்பாடிதான்!
Recommended Video
சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக குறைந்த பட்சம் 21 தொகுதிகளில் வென்றால்தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். இல்லாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக தொடர்வார் என்ற நிலையே உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலோடு, 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. இதேபோல் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கு தனியாக வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்த 22 தொகுதிகளில் குறைந்த பட்சம் 21 இல் வென்றால் தான் திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக முடியும். இல்லாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்கிறார்கள்.
அறிவாலயம் வருகிறார்.. சந்திரபாபு நாயுடு ஏன் இப்போ.. இங்கே வரணும்.. என்னாவா இருக்கும்!
திமுக பலம் 98
இது எப்படி என்கிறீர்களா, விஷயத்துக்கு வந்துடுவோம். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக் 234 ஆகும். இதில் அதிமுக கடந்த தேர்தலில் 136 இடங்களில் வென்றது. திமுக காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது.
மாறிய ஆதரவு
இதில் ஜெயலலிதா மறைவால் அதிமுகவின் பலம் 135 ஆக மாறியது. மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிமுகவின் பலம் 116 ஆக மாறியது. இத்துடன் கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதால் அதிமுகவின் பலம் 114 என்ற அளவில் குறைந்தது.
பலத்தை இழந்த அதிமுக
இதற்கிடையில் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் உயிரிழந்தது, ஓசூர் தொகுதி எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி பதவி இழந்தது உள்ளிட்ட காரணங்களால் அதிமுக பலம் 112 என்ற அளவில் இப்போது குறைந்துள்ளது. இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைசெல்வன், பிரபு ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். இதன்காரணமாக 109 என்ற அளவுக்கு அதிமுகவின் பலம் சரிந்து காணப்படுகிறது.
5 பேர் தகுதி நீக்கம்
இப்போது 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலுக்கு பிறகான நடவடிக்கையை யோசித்தார். அதன்படி தேர்தல் முடிந்த பிறகு ரத்தினசபாபதி, கலைசெல்வன், பிரபு, மற்றும் கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகியார் அதிமுகவை ஆதரிக்காவிட்டால் கட்சி தாவல் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முதல்வர் எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.
அதிமுக கணக்கு
இந்த 5 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 229 ஆக குறையும். எனவே ஆட்சிக்கு தேவையான உறுப்பினர்களின் 115 ஆக இருந்தாலே போதும். ஏற்கனவே அதிமுகவிற்கு 109 பேரின் ஆதரவு இருப்பதால் இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வென்றாலே ஆட்சியை தக்க வைக்க முடியும் என எடப்பாடி கணக்கு போடுகிறார்.
118 மேஜிக் எண்
எனவே திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டும் என்றால், குறைந்த பட்சம் 21 தொகுதிகளில் வென்றால் தான் சாத்தியமாகும். தற்போது திமுக கூட்டணியின் பலம் 97 ஆக உள்ளது. 21 தொகுதிகளில் திமுக வென்றால் 118 என்ற ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் எண்ணை சேர்க்க முடியும். எனவே இந்த தேர்தல் எடப்பாடிக்கு மட்டுமல்ல ஸ்டாலினுக்கும் பெரும் சிக்கலான தேர்தல்தான்.