என்னாது! போராட்டத்தை நாங்கள் தூண்டினோமா?.. உண்மைக்கு மாறாக பேசுகிறார் ஜெயக்குமார்.. ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: போராட்டத்தை தூண்டிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் உண்மைக்கு மாறாக பேசியுள்ளார் என திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த 14-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு தினங்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டசபை கூடியது.
இதில் பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டாலின் பேசுகையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் தடியடியை தூண்டிவிட்டது யார். வண்ணாரப்பேட்டைக்கு முதல்வர் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
அது போல் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் பிப்ரவரி 14-ஆம் தேதி திண்டுக்கல் ஐ லியோனியின் பொதுக் கூட்டம் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர்தான் போராட்டம் தொடங்கியது. எனவே இந்த போராட்டம் திட்டமிட்டு தூண்டப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுகையில் வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து முதல்வர் அளித்த விளக்கத்தில் திருப்தியில்லை. தீர்மானம் குறித்து விவாதம் நடத்தப்படாமலேயே அதனை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
வண்ணாரப்பேட்டை போராட்டத்தை தூண்டிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவதில் உண்மை ஏதும் இல்லை. லியோனி மீது ஜெயக்குமார் கூறிய குற்றச்சாட்டை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். டிசம்பர் மாதம் முதலே 16 ஜமாத் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றார் ஸ்டாலின்.