கலவரத்துக்கு காரணமே அதிமுகவும், பாமகவும் தான்... ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: குடியுரிமை சட்டம் விவகாரத்தில் நடைபெறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், துப்பாக்கிச்சூடு, உட்பட கலவரத்துக்கு காரணமே அதிமுகவும், பாமகவும் தான் காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குடியுரிமை சட்டத்தை ஆதரித்து அதிமுகவும், பாமகவும் வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்த சட்டத்தை மத்திய அரசால் நிறைவேற்றியே இருக்க முடியாது என ஸ்டாலின் கூறினார். மேலும், இந்த சட்டத்தை திரும்பப்பெறக் கோரி அரசியல் கட்சிகளும், சிறுபான்மையின மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அதை மத்திய அரசு காதில் வாங்கிகொள்ளவில்லை என ஸ்டாலின் விமர்சித்தார். ஆனால் அதற்காக தங்கள் போராட்டம் ஒருபோதும் ஓயாது என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்து உள்ளதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய வகையிலோ, ஏழை எளிய மக்களுக்கு பயன் தரும் வகையிலோ எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை எனக் கூறினார். ஏறத்தாழ 3 மணி நேரத்தை நெருக்கி நிதியமைச்சர் நீண்ட உரையாற்றியும் அதில் எந்த பயனுமே இல்லை எனக் குறிப்பிட்டார். அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கில் தான் மத்திய நிதிநிலை அறிக்கை இருப்பதாக சாடினார். பொருளாதார தேக்க நிலை உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து மக்களை திசைதிருப்பவே கொடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதாக ஸ்டாலின் விமர்சித்தார்.
சி ஏ ஏ-வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்... சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிறுபான்மையின மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆபத்தை உருவாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தொடக்கம் முதலே திமுக குரல் கொடுத்து வருவதாகவும், அதிமுகவும், பாமகவும், தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்துக்கு காரணம் என மிக அழுத்தமாக கூறிக்கொள்வதாக ஸ்டாலின் பேசினார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், என்.சி.ஆர்., என்.பி.ஆர். போன்றவற்றையும் கொண்டு வந்து மத்திய அரசு போராட்டத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
குடியுரிமை சட்டம் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகவும் ஆணவப்போக்கோடு நடந்துகொள்வதாக கூறிய ஸ்டாலின், திமுக முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடரும் என கூறினார்.