23ஆம் தேதி ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்... தமிழக அரசு மீது புகார்
தமிழகத்தில் இதுவரை நடந்த ரெய்டுகளுக்கு நடவடிக்கை என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
சென்னை: தமிழகத்தில் இதுவரை நடந்த ரெய்டுகளுக்கு நடவடிக்கை என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் பேசுகையில், மாநில உரிமைகளை மத்தியில் உள்ள ஆட்சி பறித்து வருகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு திமுக தார்மீக ஆதரவு அளித்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் எதுவும் நடக்காதது போல் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் பேசுகிறார்.
ரஜினி பேச்சு
தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் இது குறித்து புகார் அளிக்க வரும் 23-ஆம் தேதி ஆளுநரை சந்திக்கவுள்ளேன். 8 வழிச்சாலையை ஆதரித்து ரஜினி பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஒப்புக் கொண்டுள்ளார்
தமிழகம் முழுவதும் உறவினர்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் நடந்த முறைகேடுகளுக்கு ஆதாரம் உள்ளதை முதல்வர் எடப்பாடி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
சோதனை
தமிழகம் முழுவதும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடந்த எந்த ஒரு வருமான வரித் துறை சோதனைக்கு இதுவரை நடவடிக்கை இல்லை. தமிழகத்துக்கு எதிரான மத்தியஅரசின் செயல்களால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளோம்.
மத்திய அரசு விளக்கம்
கார்களிலேயே பணமும்,தங்கமும் தமிழகத்தை சுற்றிவரும் நிலை இருக்கிறது.எந்த பிரச்சினைக்கும் முதல்வர் முறையாக பதில் தருவதில்லை. வருமானவரி சோதனை உள்நோக்கத்துடன் நடைபெறுகிறதா என மத்தியஅரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.