நேரடியாக கண்டித்து அந்த உறவை துண்டியுங்கள்.. செயற்குழு கூட்டத்தில் ஜெ.அன்பழகன் பேச்சு
Recommended Video
சென்னை: குடும்பமா, கழகமா என்ற கேள்வி வந்தபோது கழகம்தான் முக்கியம் என கூறிய கருணாநிதி வழியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்று, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.
திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, ஜெ.அன்பழகன் பேசியதாவது:
மெரினா வெற்றி
13 தொகுதிகளில் கருணாநிதி வெற்றி பெற்றார் என இரங்கல் தீர்மானத்தில் சுட்டி காட்டினர். மெரினாவோடு சேர்த்து கருணாநிதி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். லட்சோப லட்சம் தொண்டர்களின் உணர்ச்சியும் உத்வேகத்தையும் கூட்டி விட்டுச் சென்றிருக்கிறார். எந்த தலைவனும் மறைந்த பிறகு கைதட்டி மகிழ்ச்சியடைந்ததை யாரும் பார்த்ததில்லை. ஆனால் தலைவருக்கு மெரினாவில் இடம் கிடைத்தது என்று சொன்னவுடன் செயல் தலைவர் உடைந்து போய் ஒரு குழந்தையைப் போல அழுத அந்த காட்சியை பார்த்து லட்சோப லட்சம் மக்கள் அங்கிருந்து ஆனந்தக் கண்ணீர் விட்டனர். ஒரு கட்சி குடும்பம் போல இருப்பது திமுகவில் மட்டும்தான்.
தமிழ்நாட்டில் இடம் இல்லை
யாரெல்லாம் நமக்கு மெரினாவில் இடம் தரமாட்டோம் என்று சொன்னார்களோ அவர்களுக்கு இனி தமிழ்நாட்டிலேயே இடமில்லை என்கிற அளவுக்கு நாம் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டிய காலத்தில் உள்ளோம். இனி இந்த அரசுக்கு இந்த அரசை நம்பி பயன் கிடையாது. அந்த அரசு என்பதை விட, திராவிட இயக்கங்களை அழிக்கக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களோடு உறவு வைக்க தேவையில்லை.
நேரடி கண்டிப்பு
தளபதி நேரடியாக கண்டித்து அந்த உறவை துண்டிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நீங்கள் தலைவர். இப்போது, செயல் தலைவராக இருந்தாலும் கூட தலைவராக வரப்போகிறவர். தலைவர் கலைஞர் நெருக்கடிநிலையை எவ்வாறு எதிர்த்தாரோ, அதேபோல இந்த அரசையும் இந்த அரசுக்கு துணை போகிற யாராக இருந்தாலும் அவர்களை எதிர்க்க வேண்டும்.
இனத் தலைவனுக்கு இடமில்லை
நம்முடைய இனத் தலைவனுக்கு, இடம் இல்லை என்று கூறிய இந்த ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டியது உள்ளது. நீங்கள் எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருக்கும். பெரியார், அண்ணாவை எப்படி கலைஞரில் பார்த்தோமோ அதேபோல பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை தளபதியிடம் (ஸ்டாலினிடம்) பார்க்கிறோம்.
குடும்பத்தைவிட கழகம் முக்கியம்
எனவே எதற்கும் கலங்க தேவையில்லை. வருத்தங்களை எல்லாம் தாண்டி நாம் பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. உங்களிடம் நான் மன்றாடிட கேட்பது தலைவர் கலைஞர் போல தலைவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். குடும்பமா, கழகமா என்ற கேள்வி வந்தபோது, கழகம் தான் என்று கூறி முன்னாடி வந்து நின்று இயக்கத்தை காப்பாற்றியவர். அவர் வழியில் இருந்து நீங்கள் தொடர வேண்டும். நிச்சயமாக தொடருவீர்கள். உங்கள் பின்னால் நாங்களெல்லாம் இருக்கிறோம். இவ்வாறு ஜெ. அன்பழகன் தெரிவித்தார்.