முதல்வர் அறை முன்பாக அமர்ந்து ஸ்டாலின் திடீர் தர்ணா.. தலைமைச் செயலகத்தில் பரபரப்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமியே பொறுப்பு என்று முதல்வர் அறை முன்பு ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் அவர் வெளியேற்றப்பட்டார்.
Recommended Video
சென்னை: துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் பொறுப்பு என்று குற்றம்சாட்டி அவர் பதவி விலக கோரி தலைமை செயலகத்தில் முதல்வர் அறை முன்பு ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் அவரை காவலர்கள் வெளியேற்றினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்தால் 13 அப்பாவி மக்களின் உயிரை போலீஸார் பறித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. தூத்துக்குடியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டத்தை எதிர்க்கட்சியினர் புறக்கணித்தனர். இதையடுத்து முதல்வர் அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அவை காவலர்கள் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
தலைமை செயலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஸ்டாலினும் மறியல் போராட்டம் நடத்துகிறார்.