கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தின் பின்னணி இதுதான்.. ஸ்டாலின் பரபர அறிக்கை
சென்னை: எம்எல்ஏ கருணாசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால், அவசரகதியில் முடிவெடுத்துள்ளது கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பைச் சேர்ந்த கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆகும்.
[கருணாசை லேசுல நினைத்துவிடாதீர்கள்.. செம பிளான்ல இருக்காரு!]
ஆனால் சமீபகாலமாக அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசுக்கு எதிராக பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
சர்ச்சை பேச்சு
சென்னையில், பொது மேடையில் கருணாஸ் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தான் அடித்து விடுவேன் என்று பயந்து கொண்டு இருப்பதாக, கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அந்த பேச்சுக்காகவும், ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ரசிகர்களை தாக்கிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் கருணாஸ்.
எம்எல்ஏ பதவி
ஜாமீனில் வெளியே வந்த பிறகும் நேற்று அவர் அளித்த பேட்டியில், அரசை தாக்கி பேசினார். மேலும் டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி யுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில்தான் கருணாஸின் எம்எல்ஏ பதவியை பறிப்பதற்கு அரசு தரப்பு முயற்சிகளை தொடங்கியுள்ளது.
3 எம்எல்ஏக்கள்
இதுதவிர, கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு, அறந்தாங்கி தொகுதி ரத்தினசபாபதி, விருத்தாசலம் தொகுதி கலைச்செல்வன் ஆகிய தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் மீது திமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
ஸ்டாலின் ஆதரவு
கருணாஸ் உள்ளிட்ட இந்த நால்வரின் எம்எல்ஏ பதவியும் பறி போகும் சூழ்நிலை உருவாகி உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார். கருணாசுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முயற்சி செய்வதாக, செய்திகள் வெளியாகி உள்ளதாக ஸ்டாலின் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதான் திட்டம்
18 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ள நிலையில், மேலும் சிலரை தகுதி நீக்கம் செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை காப்பாற்றுவதற்கான முயற்சி நடைபெறுகிறது. ஆட்சியை காப்பாற்றுவதற்கு சபாநாயகர் பதவியை முதல்வர் பதவி பயன்படுத்திக்கொள்கிறார். சபாநாயகரின் பதவிக்கான கௌரவம் என்பது முதல்வரால் குறைக்கப்பட்டு வருகிறது. அவசரகதியில் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க அரசும் சபாநாயகரும் முயற்சி செய்வது கண்டனத்துக்குரியது என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.