பாதம் பணிந்தாவது பதவியில் தொடருவதில் மட்டுமே குறி... முதல்வர் மீது ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 % அதிகரித்துள்ள நிலையில் அதைப் பற்றியெல்லாம் முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் கவலைபடவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை ஆட்சியை தக்கவைப்பதும், யாருடைய பாதம் பணிந்தாவது பதவியில் தொடர வேண்டும் என்பது மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புதிய ஆதாரம்
கடந்த மூன்று வருடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கல்வியைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் (இடை நிற்றல்) எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்து விட்டது" என்று, அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்விக்கு ஏற்பட்டுவரும் பரிதாபகரமான நிலை குறித்து, நாடாளுமன்றத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்வித்துறை கீழிருந்து மேல்வரை அதிமுக ஆட்சியில் எந்த அளவு மிக மோசமான சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு புதிய ஆதாரம் எதுவும் தேவையில்லை.
புள்ளிவிவரம்
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 2017-18ல் மட்டும் 16 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியிருக்கிறார்கள் என்றும் - அதிலும் குறிப்பாக 2015-16ல் 8 சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதமாக அதிகரித்திருக்கிறது என்றும் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், சட்டமன்றத்தில் அளிக்கும் கொள்கை விளக்கக் குறிப்புகளில் "புள்ளி விவரங்களை"எப்படி பொய்யாக இந்த அதிமுக அரசு கூறுகிறது என்ற "பூனைக்குட்டி" வெளியே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
மோகம்
பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முதலில் செயல்படுத்திட வேண்டும் என்ற மோகத்திலும், வேகத்திலும், 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தொடர்ந்திருந்தால் எத்தகைய பாதிப்புகளை மாணவர் சமுதாயம் சந்திக்க நேர்ந்திருக்கும்? அது பற்றிய கவலை எல்லாம் பள்ளிக் கல்வி அமைச்சருக்கும் இல்லை; முதலமைச்சருக்கும் இதைப் பற்றியெல்லாம் ஆலோசிக்க நேரமில்லை. அவர்களுக்குக் கவலை எல்லாம், யாருடைய பாதம் பணிந்தாவது, பதவியில் எப்பாடு பட்டேனும் தொடர வேண்டும் என்பது மட்டுமே!
கோரிக்கை
9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றலுக்கு ஏழ்மை, பொருளாதார சூழ்நிலைகள் காரணம் என்று கூறப்பட்டிருந்தாலும், பள்ளிக் கல்வியை வழங்குவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டுச் செல்வதற்கு அவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள வேலை இழப்பு காரணமா? என்பது போன்றவற்றை ஆய்வு செய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு கே.ஏ. செங்கோட்டையனைக் கேட்டுக் கொள்கிறேன்.