ஐயா, பெரிய ஐயா.. ரொம்ப மகிழ்ச்சி.. ஆனா பாமகவை முதலில் சட்டசபைக்கு அனுப்பியது யார்.. ஸ்டாலின் கேள்வி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
அரக்கோணம்: "இவர் சொல்லித்தான் எனக்கு துணை முதல்வர் பதவியே கிடைத்தது என்று பெரிய ஐயா சொல்லி இருக்கின்றார், ஐயா, பெரிய ஐயா, எனக்காக நீங்கள் பரிந்துரை செய்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனால், பாமக-வை முதன்முதலில் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்பி வைத்தது யார்?
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த உங்கள் மகன் சின்ன ஐயா, அமைச்சராக சென்று உட்கார்ந்தாரே எப்படி? என்று திமுக தலைவர் ஸ்டாலின் டாக்டர் ராமதாசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்யும்போது, "அரசியல் அடையாளம் கொடுத்ததே நான்தான் என்றார். பிறகு கருணாநிதியிடம் சொல்லி, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க செய்ததே நான்தான்" என்று பேசியிருந்தார். இதற்கு திருமாவளவன் அவர் தரப்பில் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார். இப்போது திமுக தலைவர் ஸ்டாலின் அரக்கோணம் சோளிங்கரில் பிரச்சாரம் செய்தபோது பேசியதாவது:
அதிர்ச்சியே இல்லை
"அதிமுக பாமக கூட்டணி சேர்ந்ததால் யாரும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அடையவேண்டாம். அது ஒரு பெரிய அதிசயம் கிடையாது. ஏற்கனவே, சென்னை, கோவை, பெங்களூரில் நடந்த பேரத்தின் அடிப்படையில்தான் பெரிய ஐயாவும் சின்ன ஐயாவும், இன்றைக்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
வாங்க பாத்துக்கலாம்
ராமதாசுக்கு எந்த கொள்கையும் கிடையாது. இது எங்களுக்கு மட்டுமில்லை.. பாமகவில் இருக்கக்கூடிய தொண்டர்களுக்கே அது நன்றாக தெரியும். இன்றைக்கு திமுகவை பார்த்து 4-வது இடம் என்கிறார்கள். நீங்கள் இப்போதும் 7+1-ல்தான் நிற்கிறீர்கள். வாங்க.. என்ன வரப் போதுன்னு பார்த்துக்கலாம். அப்பறம் சொல்லுங்க திமுக எந்த இடத்தில் இருக்கு என்று.
சின்ன ஐயா அன்புமணி
இவர் சொல்லித்தான் எனக்கு துணை முதல்வர் பதவியே கிடைத்ததாம். அப்படின்னு பெரிய ஐயா சொல்கிறார். ஐயா, பெரிய ஐயா, எனக்காக பரிந்துரை செய்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு தகுதி இருக்கபோயிதானே என்னை பரிந்துரை செய்தீர்கள். அதனால எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், பாமக-வை முதன்முதலில் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்பி வைத்தது யார்? தலைவர் கலைஞர்தானே? மறந்துட்டீங்களா? மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சின்ன ஐயா, அன்புமணி ராமதாஸ், அமைச்சராக சென்று உட்கார்ந்தாரே அது எப்படி?
சோனியா காந்தி
அன்னைக்கு பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் மத்திய அமைச்சரவை பதவி தரவே மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டனர். அதற்காக கோபித்துக்கொண்டு டெல்லியில் இருந்து கிளம்பி விட்டீர்களே, ஐயா, பெரிய ஐயா மறந்து விட்டீர்களா?
மோடியின் திட்டங்கள் "வரும் ஆனா வராது" நிலையில்தான் உள்ளது.. மு.க.ஸ்டாலின் கிண்டல்
கையை பிடித்தாரே?
அப்பொழுது கலைஞர்தான் உங்கள் கையை பிடித்து உட்கார வைத்து, உங்கள் பையனை கொண்டு வந்து உட்கார வைக்க வேண்டியது என் பொறுப்புன்னு சொன்னாரே.. அதுக்கப்பறம் மன்மோகன் சிங்கிடத்திலும், சோனியா காந்தியிடமும் வாதாடி, போராடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மத்திய அமைச்சர் பொறுப்பில் உட்கார வைத்தாரே.. மறந்து விட்டீர்களா?
வன்முறை கட்சி
இன்றைக்கு அதிமுகவை வாழ்த்துகிறீர்கள், பாராட்டுகிறீர்கள்., எங்களை வன்முறை கட்சின்னு சொல்றீங்களே.. உங்களை வன்முறை கட்சி என்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே சட்டமன்றத்தில் சொன்னாரே.. அதை மறந்து விட்டீர்களா?" என்று பேசினார்.