புதிய தலைமைச் செயலகம் கட்டியது என்ன ஜெ.வின் அப்பா வீட்டு பணமா?: ஸ்டாலின்
அரியலூர்: புதிய தலைமைச் செயலகத்தை கட்டியது ஜெயலலிதாவின் அப்பா வீட்டு பணத்திலா என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதி அளிக்கும் கூட்டம் நேற்று இரவு அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் சார்பில் தலா ரூ.1 கோடியே 5 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
கூட்டத்தில் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
மக்கள் அவதி
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீர்மானம் நிறைவேற்றிய ஜெ.
2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆட்சி செய்தபோது தற்போதுள்ள தலைமைச் செயலகம் பாழடைந்துவிட்டதால் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று ஜெயலலிதா தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
திமுக ஆட்சியில்
பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக ஓமந்தூரர் தோட்டத்தில் மக்கள் வரிப்பணத்தில் பல கோடிகளை செலவு செய்து புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை கட்டியது.
ஜெ. அப்பா வீட்டு பணமா?
தற்போது ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அரசு புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை பூட்டி அழது பார்த்துள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்பட்டுள்ளது. இது என்ன ஜெயலலிதாவின் அப்பா வீட்டு பணமா? என்று கேட்டுள்ளார் ஸ்டாலின்.
சமச்சீர் கல்வி திட்டம்
திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்தார். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த பொதுத்தேர்வில் 30 பேர் முதலிடமும், 52 பேர் இரண்டாம் இடமும், 1,326 பேர் முன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
இதுவே வேலை
திமுக எந்த நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை முடக்குவதே ஜெயலலிதாவின் முதல் வேலையாக உள்ளது.
அமைச்சர்கள் மாற்றம்
ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. இதுவரை 51 ஐஏஎஸ் அதிகாரிகள், 41 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கொலை, கொள்ளை
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெட்கமான செயல்
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மற்றும் வழக்கறிஞரை மாற்றக் கூடாது என்று கூறி ஒரு முதல்வர் நீதிமன்ற வாசல்படி ஏறியுள்ளது எவ்வளவு வெட்கமான செயல். வரும் நாடாளுமன்ற தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை மாற்றும் சக்தியாக நீங்கள் இருக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.