அரசியல் ஆதாயத்துக்காகவா அனைத்து கட்சிக் கூட்டம்? வைகோவுக்கு ஸ்டாலின் பதிலடி! #DMK
காவிரி பிரச்சனைக்கான அனைத்து கட்சிக் கூட்டம் என்பது அரசியல் ஆதாயத்துக்காக அல்ல என்று மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக அல்ல... தமிழகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களிடம் கருணாநிதிதான் வற்புறுத்தி, திமுக ஆட்சி இருந்த போது தான் காவிரி நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது.
வைகோ 18 ஆண்டு காலம் திமுகவின் எம்.பியாக இருந்தவர். அனைத்துக் கட்சி கூட்டம் அரசியல் ஆதாயத்திற்காக கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. தமிழகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்த நடைபெற்ற கூட்டம்
இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கும் அழைப்பு அனுப்பினோம். தேமுதிகவையும் அழைத்தோம். காவிரி பிரச்சனையில் உண்மை நிலை என்ன என்பதை தமிழக பா.ஜ.க தலைவர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு மதிப்பளித்து அனைத்துக் கட்சி கூட்டம், சட்டசபை சிறப்புக் கூட்டம் ஆகியவற்றை அதிமுக அரசு கூட்டவில்லை என்றால் மீண்டும் இதே போன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.